சசிகலா சபதத்தை நிறைவேற்றி விட்டோம்.. டி.டி.வி. தினகரன் !
சசிகலாவின் சபதத்தை நிறைவேற்றியுள்ளோம் என அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சட்டப்பேரவையில் இன்று நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று சசிகலாவின் சபதத்தை நிறைவேற்றிவிட்டோம் என அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் பெரும் அமளி மற்றும் எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வென்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். அவருக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 11 எம்எல்ஏக்கள் எதிராக வாக்களித்துள்ளனர் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட அதிமுகவினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் மரியாதை செலுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், சசிகலாவின் சபதத்தை நிறைவேற்றியுள்ளோம். ஜெயலலிதா அரசை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வந்து வெற்றி பெற்றுள்ளோம் என்று கூறினார்.
அ.தி.மு.க-வின் எதிர்க்கட்சியான திமுக-வோடு மறைமுக உறவு வைத்திருந்தவர்களை எப்படி மன்னிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். பன்னீர்செல்வம் திமுகவோடு கூட்டு வைத்துள்ளார் என்பது இன்றைய நிகழ்வுகளால் உறுதியாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.