2 குழந்தைகளையும் சொந்த குழந்தைகள் போல் பார்த்தோம், எங்களிடம் கொடுத்திருக்கலாமே.. கலங்கிய ஹவுஸ் ஓனர்!
2 குழந்தைகளையும் எங்களது சொந்தக் குழந்தைகள் போல் பார்த்து வந்தோம் என அபிராமி தங்கியிருந்த வீட்டின் ஹவுஸ் ஓனர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
சென்னை: 2 குழந்தைகளையும் எங்களது சொந்தக் குழந்தைகள் போல் பார்த்து வந்தோம், அந்த குழந்தைகளை எங்களிடம் கொடுத்திருக்கலாமே என அபிராமி தங்கியிருந்த வீட்டின் ஹவுஸ் ஓனர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம்கட்டளை அங்கணீஸ்வரர் கோயில் தெருவில் வசித்து வந்தவர் அபிராமி. கடந்த 30 மற்றும் 31ம் தேதி ஆகிய நாட்களில், தனது கள்ளக்காதலன் சுந்தரத்தின் பேச்சைக் கேட்டு, தான் பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல் கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவானார் அபிராமி.
நாகர்கோவிலில் வைத்து கள்ளக்காதலன் மூலம் அபிராமியை பிடித்து கைது செய்தனர் போலீசார். 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து அபிராமி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அபிராமி குறித்து அவரது வீட்டின் உரிமையாளர் சுமதி பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,

அஜய் 3 மாத குழந்தையாக
கடந்த 7 ஆண்டுகளாக எங்கள் வீட்டில் விஜய் மற்றும் அபிராமி தம்பதிகள் மாதம் 3500 வாடகை கொடுத்து குடியிருந்து வந்தனர். அவர்களது மகன் அஜய் மூன்று மாத கைக்குழந்தையாக இருந்த போது, எங்கள் வீட்டிற்கு வந்தனர்.

எங்கள் வீட்டில்தான் இருப்பார்கள்
அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அடுத்த வீட்டில் தான் நாங்கள் வசித்து வருகிறோம். இதனால் எப்பொழுதும் அபிராமியின் இரண்டு குழந்தைகளும் எங்களது வீட்டிலே தான் இருப்பார்கள்.

சொந்தக்குழந்தைகளை போல்
நாங்கள்தான் அந்தக் குழந்தைகளுக்கு உணவு மற்றும் பால் கொடுத்து, எங்களது சொந்தக் குழந்தைகள் போல் பார்த்து வந்தோம். அவள் இப்படி கொலை செய்வாள் என்று நினைக்கவில்லை.

எப்படி மனசு வந்ததோ
அந்தப் பிஞ்சுக் குழந்தைகளைக் கொலை செய்யும் அளவுக்கு அவளுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ தெரியவில்லை. குழந்தைகளை எங்களிடம் கொடுத்திருந்தால் நாங்கள் நல்ல முறையில் வளர்த்திருப்போம்.

கண்கலங்கிய ஹவுஸ் ஓனர்
அந்தக் குழந்தைகள் இறந்து கிடந்ததை பார்க்கும் போது, எங்கள் சொந்த பேரப் பிள்ளைகளை இழந்து தவிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. இவ்வாறு அபிராமி - விஜய் தம்பதி குடியிருந்த வீட்டின் உரிமையாளர் சுமதி கண்கலங்கியபடி கூறினார்.












Click it and Unblock the Notifications