ஜெயலலிதாவின் வாக்கு எங்களுக்கு வேதவாக்கு... மவுனம் கலைத்த சி.ஆர்.சரஸ்வதி- Exclusive
ஜெயலலிதா சொன்னதை வேத வாக்காக எடுத்துக்கொண்டு எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை பட்டிதொட்டியெங்கும் சிறப்பாகக் கொண்டாடுவோம் என சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.
சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஜெயலலிதா சொன்னது போல் பட்டிதொட்டியெங்கும் வெகு சிறப்பாகக் கொண்டாடுவோம் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் சி.ஆர் சரஸ்வதி கூறினார்.
சசிகலா சிறைக்கு சென்ற பிறகு வெகு நாட்களாக மக்களின் பார்வையில் படாமல் இருந்தார் சி.ஆர் சரஸ்வதி. அவர் ஒன் இந்தியாவுக்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது குறித்து ஒன் இந்தியாவுக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள சி.ஆர் சரஸ்வதி ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா, அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 100ஆவது பிறந்தநாளை வெகு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என சொன்னார். அவருடைய வாக்கை வேதவாக்காக எடுத்துக்கொண்டு நாங்கள் எம்ஜிஆரின் பிறந்தநாளை பட்டிதொட்டியெங்கும் விமரிசையாகக் கொண்டாட உள்ளோம்.
அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழிகாட்டியுள்ளார். அந்த வழிகாட்டுதலின் படி இயக்கத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆசைப்படி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது என கழகமும் அரசும் தீர்மானித்துள்ளது.
எப்பவும் ஜெ.ஆட்சிதான்
தற்போது நடைபெற்றுக்கொண்டிருப்பது ஜெயலலிதாவின் ஆட்சி. இது என்றைக்குமே ஜெயலலிதாவின் ஆட்சிதான். ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க அவரது திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்துக்கொண்டு உள்ளோம்.
இரண்டு அணியும் இணையும்!
இரண்டு அணிகள் இணைவதற்கு என்று பேச்சுவார்த்தை குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த குழு இன்னமும் பேச்ச்சுவார்த்தையில் ஈடுபடும் எண்ணத்தில் இருக்கிறார்கள். அவர்கள் விரைவில் இணைப்பு குறித்து பதில் கூறுவார்கள்.
எம்ஜிஆர், ஜெ. மக்களுக்காக உழைத்தார்கள்
எம்ஜிஆர் மக்களுக்காக உழைத்தார். ஜெயலலிதாவும் மக்களால் நான்; மக்களுக்காக நான் எனக் கூறி மக்களுக்காக உழைத்தார். இன்று தொண்டர்களின் வழிகாட்டுதலின்படி மக்களின் திட்டங்களை, ஜெயலலிதாவின் ஆட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.
ஜெ. ஆட்சி மீண்டும் மலரும்
ஜெயலலிதா ஆட்சி எந்த குழப்பமும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போது மட்டுமல்ல, அடுத்த தேர்தலிலும் மக்கள் ஜெயலலிதாவின் இயக்கத்துக்கே ஓட்டுப் போடுவார்கள். மீண்டும், அம்மா ஆட்சியே மலரும். அதில் எந்த சந்தேகமும் இல்லை''
- இவ்வாறு சி.ஆர்.சரஸ்வதி கூறினார்.