மக்களுடன் கூட்டணி அமைப்போம்.. மகத்தான வெற்றி பெறுவோம் - ஸ்டாலின் திடீர்ப் பேச்சு
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுடன் கூட்டணி அமைத்து திமுக மகத்தான வெற்றி பெறும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தேமுதிகவுடன் கூட்டணி சேர திமுக கடுமையாக முயற்சித்து வரும் நிலையில் மக்களுடன் கூட்டணி என்று ஸ்டாலின் கூறியிருப்பது பல செய்திகளை தெரிவிப்பதாக கருதப்படுகிறது.
சென்னை அருகே நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டபோது ஸ்டாலின் பேசுகையில்,
நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. அதில் எந்த கட்சிகள் நம்மோடு கூட்டணி வைக்கப்போகிறதோ? என்பது பற்றி கவலை கிடையாது. இருக்கின்ற கட்சியோடு இணைந்து மக்கள் நம்மை ஏற்றுக்கொண்டிருப்பதால், மக்களுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்.
பெண்கள் எல்லாம் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கினால் பார்த்து பார்த்து வாங்குகிறார்கள். குறிப்பாக கருவாட்டை முகர்ந்து பார்த்தால் வாசனை வராது. நாற்றம் அடிக்கும். அந்த நாற்றத்திலேயே எந்த நாற்றம் நல்ல நாற்றம் என்று கண்டுபிடித்து வாங்குகிறார்கள்.
எனவே நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் உழைப்பவர்கள் யார்? வாதாடக்கூடியவர்கள் யார்? என்பதை உணர்ந்து பார்த்து வாக்களிக்க வேண்டும் என்றார் ஸ்டாலின்