ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்கும் எண்ணமில்லை... ஓபிஎஸ் விளக்கம்!
ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்கும் எண்ணமில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவத்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்கும் எண்ணமில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவத்துள்ளார். ஜெயலலிதாவை காப்பாற்ற முடியலையே என்ற ஏக்கம் உள்ளது என்றும் கூறியுள்ளளார்.
ஆர்கே.நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னீப்பரீட்சை நேரலை நிகழ்ச்சியில் இன்று கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவரிடம் ஆர்கேநகர் இடைத்தேர்தல், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு ஓபிஎஸ் அளித்த பதில்கள்..

ஜெ.மரணத்தை அரசியலாக்கும் எண்ணமில்லை
ஆர்கேநகரில் மாநிலக்கட்சிகள் போட்டியிடுவதால் இரு அணிக்கான போட்டி என கூற முடியாது என்றார். ஜெயலலிதா மரணத்தை அரசிலயாக்கும் எண்ணம் இல்லை என தெரிவித்தார். ஜெயலலிதாவை காப்பாற்ற முடியலையே என்ற ஏக்கம் உள்ளது என்று கூறிய அவர், ஒன்றரைகோடி ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களுக்கும் அந்த ஆதங்கம் உள்ளது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

வெளிநாட்டில் சிகிச்சை...
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை சிகிச்சைக்காக வெளி நாடு கொண்டு செல்லலாம் என தம்பிதுரையிடம் கூறினேன். அவர் சசிகலாவிடம் கூறிய போது, அப்பல்லோ மருத்துவமனை மீது நம்பிக்கையில்லையா என மருத்துவமனை நிர்வாகம் கோபிப்பதாக தம்பிதுரை கூறினார்.

விஜயபாஸ்கர் கண்டுகொள்ளவில்லை
இதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரிடமும் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லலாம் என்று கூறினேன். ஜெயலலிதாவுக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் மக்கள் நம்மை சும்மாவிட மாட்டார்கள் என்றும் கூறினேன். ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் இதனை காதில் வாங்கிக்கொள்ளவில்லை என்றார்.

சசிகலாதான் முழு பொறுப்பு
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட முழு சிகிச்சைப் பொறுப்பையும் சசிகலாதான் ஏற்றிருந்தார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த முழு விவரங்கள் எனக்கு தெரியாது.

சசி முகம் கொடுத்து பேசமாட்டார்
ஜெயலலிதா சிகிச்சைக் குறித்து கேட்டால் சசிகலா எங்களிடம் முகம் கொடுத்து பேசமாட்டார் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மதுசூதனன் பொதுச்செயலாளர் ஆக்கப்படுவார் என்றதால் தான் முதல்வராக பதவியேற்க ஒப்புக்கொண்டேன்.

அதிகாரத்தில் தலையீடு
அதிகார நிர்பந்தம், ஆட்சியில் தலையீடு, உள்ளிட்ட காரணங்களால் முதல்வர் பதவி வேண்டாம் என்றேன். ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்ததால் என்னை கட்சியில் இருந்து சசிகலா குடும்பத்தினர் அப்புறபடுத்த முயன்றனர். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் அக்னீப்பரீட்சை நிகழ்ச்சியில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications