காங்கிரஸ் ஆதரவுக் கட்சிகளுடன் நெருங்க மாட்டோம்: வைகோ உறுதி
மதுரை: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்ஸத் தோற்கடிப்பதே முக்கியம் என்பதுடன், தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியமைக்க உதவும் மனப்பான்மையுள்ள கட்சிகளுடனும் மதிமுக நெருங்காது என வைகோ கூறினார்.
மதுரையில் புதன்கிழமை மாலையில் நடந்த காந்திய மக்கள் இயக்கத்தின் 4 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற வைகோ பேசியதாவது:
நல் அரசியலும், நமது பங்கும் என்ற தலைப்பில் பேசியதாவது: பிரதமர் தலைமையிலான கூட்டத்தில், குற்ற நடவடிக்கையின்கீழ் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பதவியை இழந்தாலும், மேல்முறையீடு செய்தால் நீடிக்கலாம் என்பதற்கான சட்டத் திருத்தத்துக்கான ஒப்புதலை பெறுவதை திரும்பப் பெறுவதாக முடிவெடுத்துள்ளனர். இதன்மூலம் காங்கிரஸ் ஆட்சிக்கான வீழ்ச்சி தொடங்கியுள்ளது.

இந்த விஷயத்தில் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை விமரிசித்த காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தி, 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல் மற்றும் வதேராவின் முறைகேடு புகார்கள் குறித்து வாய் திறக்காதது ஏன்? அரசியல் நெறி குறித்த கருத்துகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது.
மதுரை நகரானது காந்தியை அரையாடை மனிதராக்கியது உள்ளிட்ட பல அரசியல் திருப்பங்களுக்கு வழிகோலியுள்ளது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்து விட்டது. இலங்கைத் தமிழர் படுகொலைக்குக் காரணமானதுடன், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும் வேடிக்கை பார்த்து வருகிறது.

மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வந்தால், நமது குடிநீருக்கும் ஆபத்து ஏற்படும்.
மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள அணைகள் பாதுகாப்புச் சட்டத்தால் தமிழகத்துக்கு முல்லைப் பெரியாறு, காவிரி உள்ளிட்டவற்றின் நீர் கிடைக்காத நிலை ஏற்படும். ஆகவே, காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற விடமாட்டோம்.
சில கட்சிகள் மதில்மேல் பூனையாக செயல்பட்டு, சந்தர்ப்பத்தைப் பொருத்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க நினைக்கலாம். அப்படிப்பட்ட கட்சிகளையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். ஆகவே, அதுபோன்ற கட்சிகளுடனும் நெருங்க மாட்டோம் என்றார்.
பாஜக, தேமுதிக,மதிமுக கூட்டணி
நிகழ்ச்சியில், மலரட்டும் மாற்று அரசியல் எனும் தலைப்பில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பேசியதாவது:
காந்தியடிகளது போராட்டத்தில் அரசியல், சமூகப் பணிகள் அடங்கியுள்ளன. அதுபோலவே செயல்பட்டு வருகிறோம். தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது. அதேபோல, இலங்கைத் தமிழர் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது. ஆகவே, பாஜக, தேமுதிக, மதிமுக ஆகியவை கூட்டணி சேர்ந்து மாற்று அணி அமைக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications