18 பேரை நீக்கி விட்டு குறுக்கு வழியில் ஜெயிக்க முயற்சி... விடமாட்டோம் - ஸ்டாலின்
முதல்வரும் சபாநாயரும் இணைந்து 18 பேரை தகுதிநீக்கம் செய்து ஜனநாயகப் படுகொலை செய்து விட்டனர் என்று எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ததன் மூலம் குறுக்கு வழியில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி வெற்றிபெற முயற்சி செய்வதாக எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சபாநாயகர் தனபாலின் ஆணைப்படி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சபாநாயகரின் செயல் கண்டனத்திற்குரியது என்றார்.
நியாயமாக கட்சித்தாவல் தடை சட்டம் என்பது கொறாடாவின் உத்தரவை மீற வேண்டும், ஆனால் இந்த 18 பேரும் கொறடா உத்தரவை மீறவில்லை.

இது கட்சித்தாவல் இல்லை
ஆளுநரிடம் மனு அளித்து முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று கூறுவது கட்சித்தாவல் ஆகாது.
இது சட்டத்திற்கு புறம்பாக ஜனநாயகத்திற்கு விரோதமாக கூட்டு சேர்ந்து சதி செய்து ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளனர்.

அப்போ நீக்கவில்லையே
நான் கேட்கிறேன் மார்ச் மாதம் இதே சட்டசபையில் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்களை நீக்கவேண்டும் என்று மனுஅளித்தனர். அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது நீக்கியிருப்பது ஏன்.

பெரும்பான்மை நிரூபிக்கவேண்டும்
ஏன் என்றால் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இதை எதிர்பார்த்துதான் நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறோம். மக்கள் மன்றத்திற்கும் செல்வோம்.

நாங்கள் தோற்கடிப்போம்
குறுக்கு வழியில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறவே எடப்பாடி பழனிச்சாமியும் சபாநாயகரும் கூட்டணி அமைத்து இந்த வேலையை செய்துள்ளனர். இதனை சட்டசபையில் நாங்கள் தோற்கடிப்போம்.

மாண்பை கெடுத்துவிட்டார்
எடப்பாடி பழனிச்சாமி அரசைக் காப்பாற்ற தவறான வழியில் சென்று சபாநாயகர் தனது மாண்பை கெடுத்து விட்டார்.
என்று கூறிய ஸ்டாலின்,எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியைப் பற்றி மக்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications