எடப்பாடி பழனிச்சாமியை தவிர யாரை முதல்வராக நியமித்தாலும் ஆதரவாக வாக்களிப்போம்.. டிடிவி தரப்பு தடாலடி
எடப்பாடி பழனிச்சாமியை தவிர யாரை முதல்வராக நியமித்தாலும் ஆதரவாக வாக்களிப்போம் என டிடிவி தினகரன் தரப்பு தெரிவித்துள்ளது.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமியை தவிர யாரை முதல்வராக நியமித்தாலும் ஆதரவாக வாக்களிப்போம் என டிடிவி தினகரன் தரப்பு தெரிவித்துள்ளது.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின் போது முதல்வர் தரப்பு மற்றும் டிடிவி தரப்பு வழக்கறிஞர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது எடப்பாடி ஆட்சியை கலைக்க டி.டி.வி. தினகரன் அணி திட்டமிட்டுள்ளதாக முதல்வரின் வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதாடினர். திமுகவுடன் கைகோர்த்து ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதற்காகவே எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோருவதாகவும் வாதிட்டார்.
இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் வாதாடிய தினகரன் தரப்பு வழக்கறிஞர் சிங்வி திமுக பக்கம் சாய வேண்டும் என்பது தங்கள் நோக்கமில்லை என்றார். எடப்பாடி பழனிச்சாமியை தவிர வேறு யாரை முதல்வராக நியமித்தாலும் ஆதரவாக வாக்களிப்போம் என்றும் அவர் கூறினார்.
மேலும் நல்ல முதல்வருடன் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே நோக்கம் என்றும் தினகரன் தரப்பு வழக்கறிஞரான சிங்வி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு விசாரணையை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தகுதிநீக்கம் உட்பட 7 வழக்குகளின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.