கடையநல்லூர் முன்னாள் திமுக எம்எல்ஏ ரசாக்குக்கு துபாயில் வரவேற்பு விழா
துபாய்: துபாயில் திராவிட முன்னேற்றக் கழக மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளரும், கடையநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எம்.ஏ. ரசாக்-குக்கு வரவேற்பு விழா கடந்த சனிக்கிழமை 03.02.2018 அன்று மாலை துபாய் தேரா பகுதியில் உள்ள ரமதா தேரா ஹோட்டலில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

அரிகேசவநல்லூர் எஸ்.எஸ். மீரான் தலைமையில் முகம்மது தாஹா முன்னிலையில் கடையநல்லூர் மூ.மசூது வரவேற்போடு விழா துவங்கியது. விழாவில் பேசிய கம்மது தாஹா, ஷா, யாசீன், நஜ்முதீன், பாலா (உதயநிதி மன்றம், துபாய்), சொக்கலிங்கம், அபுதாபி அப்துல் காதர், எஸ்.எஸ். மீரான் மற்றும் திருமதி ஜெசீலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கியும் எம்.எம்.ஏ.ரசாக் அவர்களின்சேவை பற்றியும் எடுத்துரைத்தார்கள்.

பின்னர் அமீரகம் வாழ் அனைத்து தமிழ் அமைப்புகளின் சார்பில் " சிறந்த சமூக நல்லிணக்க சேவகர்" என்ற விருது எம்.எம்.ஏ.ரசாக் அவர்களுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்னர் ஏற்புரை வழங்கிய திராவிட முன்னேற்றக் கழக மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளரும், கடையநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எம்.ஏ..ரசாக் இன்றைய தமிழக அவலங்களை விரிவாக எடுத்துரைத்தார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்துவரும் தமிழக நலன் குறித்த நடவடிக்கைகளையும் தமிழகத்தின் மேம்பாட்டிற்கு மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் தெளிவாகவும் விரிவாகவும் மக்கள் முன் விவரித்தார்.

இவ்விழாவில் துபாய் மற்றும் அமீரகத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் கழகத்தினரும் தமிழர்களும் கலந்து கொண்டனர். விழாவை சிம்மபாரதி தொகுத்து வழங்கினார்.












Click it and Unblock the Notifications