இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!
புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் அரசியல் நகர்வு குறித்து கடந்த சில வாரங்களாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது உறுதி என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி அதிருப்திகளில் முக்கியமான பெயராக சி.விஜயபாஸ்கர் பார்க்கப்படுகிறார். குறிப்பாக த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்த விவகாரத்தில் அதிமுகவில் கடும் சர்ச்சை ஏற்பட்டது.

அந்த விவகாரத்தைத் தொடர்ந்து நான்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து த.வெ.க-வில் இணைந்தனர். அந்த சூழலில் முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அதிமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் தனித்த பாதையில் செயல்பட்டு வந்தனர்.
அதிமுக
பின்னர் பல எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்த நிலையில், சி.விஜயபாஸ்கர் மட்டும் அந்த சந்திப்பில் பங்கேற்கவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நேரடியாக தனது சொந்த தொகுதியான விராலிமலைக்கு திரும்பிய சி.விஜயபாஸ்கர், வட்டம், ஒன்றியம், நகர நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்து அவர் தனது நெருங்கிய ஆதரவாளர்களுடன் தொடர்ந்து கருத்து பரிமாற்றம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
சி விஜயபாஸ்கர்
இந்த ஆலோசனைகளின் போது, "நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்களுடன் இருப்போம்" என்று ஆதரவாளர்கள் உறுதி அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், புதுக்கோட்ட்டை அதிமுக வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களின்படி, சி.விஜயபாஸ்கரின் பல முக்கிய ஆதரவாளர்கள் ஏற்கனவே அதிமுகவை விட்டு விலகி த.வெ.க-வில் இணைந்து வருகின்றனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த அமைச்சர் பர்வேஸ் முன்னிலையில் பல நிர்வாகிகள் கட்சி மாறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தவெக
இதற்கிடையே, சி.விஜயபாஸ்கரும் த.வெ.க மேலிடத்துடன் மறைமுக பேச்சுவார்த்தையில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் சட்ட ரீதியான விவகாரங்கள் காரணமாக இறுதி முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீப நாட்களாக விராலிமலை மற்றும் அன்னவாசல் பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளில் சி.விஜயபாஸ்கர் பங்கேற்று வருகிறார். ஆனால் அந்த நிகழ்ச்சிகளில் அவரது அணுகுமுறையே முற்றிலும் மாறுபட்டுள்ளது.
இரட்டை இலை
பொதுவாக அதிமுக நிகழ்ச்சிகளில் கட்சித் துண்டு அணிந்து பேசும் சி.விஜயபாஸ்கர், இந்த நிகழ்ச்சிகளில் அதனை தவிர்த்துள்ளார். மேலும், தனது உரைகளில் அதிமுக, இரட்டை இலை சின்னம் அல்லது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பெயர்களை எங்கும் குறிப்பிடவில்லை. அதுமட்டுமல்லாமல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிகழ்ச்சி அழைப்பிதழ்களிலும் அதிமுக சின்னமோ, கட்சித் தலைவர்களின் புகைப்படங்களோ இடம்பெறவில்லை. இதுவே அவர் கட்சியிலிருந்து விலகத் தயாராகி வருகிறாரா என்ற கேள்வியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
அதிமுக அலுவலக சாவி
இந்த சூழலில் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலக சாவி, எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது முக்கிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்ததன் காரணமாக, சி.விஜயபாஸ்கரிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் புதிய மாவட்டச் செயலாளர் நியமிக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக மாவட்ட அலுவலகத்தின் கட்டுப்பாடும் புதிய நிர்வாகத்தின் கைகளுக்கு சென்றுள்ளது.
அதிமுகவில் தொடர்வாரா?
இதன் மூலம் அதிமுக அமைப்பில் சி.விஜயபாஸ்கரின் செல்வாக்கு குறைக்கப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஆனால் கட்சி மாறுவது குறித்து சி.விஜயபாஸ்கர் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதிமுகவில் தொடர்வாரா, அல்லது த.வெ.க-வில் இணையவாரா என்பது குறித்து அவர் மவுனம் காத்து வருகிறார். ஆனால் மாவட்ட அலுவலக சாவி ஒப்படைப்பு, ஆதரவாளர்களின் கட்சி மாற்றம், நன்றி தெரிவிப்பு கூட்டங்களில் அதிமுக அடையாளங்களை தவிர்த்தது போன்ற சம்பவங்கள் அனைத்தும் சேர்ந்து பார்க்கும்போது, அவர் கட்சி தாவுவது உறுதி என்றே சொல்கின்றனர் புதுக்கோட்டை அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications