ஓபிஎஸ் கிணறு விவகாரம்: வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவிக்குச் சொந்தமான கிணற்றை லெட்சுமிபுரம் கிராமமக்கள் பொதுப் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதுதொடர்பான வழக்கை முடித்த
மதுரை: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லெட்சுமிபுரத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலெட்சுமிக்கு சொந்தமான கிணற்றை, ஆளுநர் பெயருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்து கிராம மக்கள் பயன்பாட்டுக்காக வழங்கிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதால், வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக லெட்சுமிபுரத்தைச் சேர்ந்த ரெங்கசாமி தாக்கல் செய்த மனுவில், " பெரியகுளம் அருகேயுள்ள லெட்சுமிபுரத்தில் கிராம மக்கள் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், லெட்சுமிபுரத்தில் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலெட்சுமிக்கு சொந்தமான நிலத்தில் கிணறு தோண்டப்பட்டது. அப்போது, லட்சுமிபுரம் கிராமத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மக்கள் போராட்டம் நடத்தியதால், வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்து கிணறு தோண்டும் பணிக்குத் தடை விதித்தார். மேலும், இந்தக் கிணறு தோண்டுவதன் மூலமாக லெட்சுமிபுரம் உள்ளிட்ட 5 கிராம மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது விஜயலெட்சுமி தரப்பு வழக்கறிஞர், சர்ச்சைக்குரிய கிணறு உள்ள பகுதியை ஆளுநர் பெயருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்து லட்சுமிபுரம் கிராம மக்கள் பயன்பாட்டுக்காக வழங்கிய ஆவணங்களைத் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவை அளித்தனர்.