மீண்டும் இணைய தூது விட்டேனா? இபிஎஸ் கருத்துக்கு ஓ பன்னீர் செல்வம் கொடுத்த ரீப்ளே இதுதான்!
சென்னை: கட்சியில் மீண்டும் இணைய ஓ பன்னீர் செல்வம் தூது விட்டதாகவும் அதற்கு தலைமை கழக நிர்வாகிகள் ஒத்துக் கொள்ளவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து ஓ பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஓபிஎஸ் பரபரப்பு பதிலை அளித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை கோஷம் எழுந்ததால் ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளாராக எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்தடுத்த நீதிமன்ற தீர்ப்புகளும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வரவே அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தல் மூலம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது. இதனால், அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி வசம் சென்றுள்ளது.
எனினும், அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த மனு சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ஓபிஎஸ் தரப்பு பெரிதும் ஒருபக்கம் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தாலும் மற்றொரு பக்கம் மக்கள் மன்றத்தை நாட இருப்பதாக கூறி திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு ஒன்றையும் நடத்தி முடித்து விட்டது.
அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டாலும் ஓ பன்னீர் செல்வம் தரப்பு அடுத்தடுத்த மூவ்களை செய்து இபிஎஸ்க்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கும் வேளைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, ஓ பன்னீர் செல்வம் அதிமுகவில் சேர தூது விட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
அப்போது நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி, கட்சியில் மீண்டும் இணைய ஓ பன்னீர் செல்வம் தூது விட்டதாகவும் அதற்கு தலைமை கழக நிர்வாகிகள் ஒத்துக் கொள்ளவில்லை எனவும் கூறினார். எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு ஓ பன்னீர் செல்வம் அணியிலும் பரபரப்பாக பேசுபொருளாக மாறியது.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஒ பன்னீர் செல்வம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பழனிசாமி தினந்தோறும் பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொண்டு இருக்கிறார். இந்த செய்தி அண்ட புழுகு ஆகாச புழுகுக்கு ஒரு சான்றாக இருக்கிறது. அடுத்த மாநாடு விரைவில் அறிவிக்கப்படும்.
எடப்பாடியும் தேர்தல் ஆணையமும் விளக்கம் கொடுக்க நீதிமன்றம் நோட்டீஸ் கொடுத்துள்ளது பற்றி கேட்கிறீர்கள். விளக்கம் அளிக்கட்டும் பார்த்துக்கொள்ளலாம். தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்க்ள் என்பது திருச்சி மாநாடு மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications