அதிவேகமாக வந்த மதுரை ஆதீனத்தின் கார்? உளுந்தூர்பேட்டை அருகே நடந்தது என்ன? போலீஸார் தகவல்
கள்ளக்குறிச்சி: சென்னை- உளுந்தூர்பேட்டை இடையே கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய நிகழ்த்தப்பட்ட சதி என குற்றம்சாட்டியுள்ளார். இதை கள்ளக்குறிச்சி போலீஸார் மறுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 6ஆவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நேற்று தொடங்கியது. இது நாளை 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரை ஆதீனம், மதுரையிலிருந்து சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது கார் உளுந்தூர்பேட்டை அருகே வந்து கொண்டிருந்த போது அவரது கார் மீது மற்றொரு கார் மோதியது.
இந்த விபத்தில் மதுரை ஆதீனம் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார். இதையடுத்து விபத்துக்குள்ளான காரிலேயே மதுரை ஆதீனம் சென்னை புறப்பட்டார். இந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் இந்த விபத்து திட்டமிட்ட சதி என்றும் தன்னை கொலை செய்யவே இது போன்ற விபத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனத்தின் 293-ஆவது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள், தன்னை கொலை செய்ய சதி நடந்ததாக குற்றம்சாட்டினார். மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்ட மாநாட்டில் ஆதீனம் இது போல் குற்றம்சாட்டி பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவர், "இந்த கார் விபத்திலிருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் என்னைக் காப்பாற்றினார். இந்த இடத்தில் நான் நிற்பேனா என்ற சந்தேகம் விபத்து நடந்த போது எனக்கு ஏற்பட்டது. புத்தர் ஆட்சி காலம் பொற்காலம் என்பார்கள். நான் பார்த்ததில்லை.
ஆனால் எங்கள் தருமபுர ஆதீனத்தின் காலம் பொற்காலம்தான். பாஜகவில் தேசபக்தி மிக்கவர்கள் உள்ளதாகவும் எத்தனையோ பேர் ஆண்டாலும் சிறந்த ஆளுமையாக இருப்பவர் பிரதமர் மோடி தான் என ஆதீனம் தெரிவித்தார்.
உளுந்தூர்பேட்டை- சேலம் ரவுன்டானா அருகே அவரது கார் மீது மற்றொரு கார் மோதியது. போலீஸார் செல்வதற்குள் இரு தரப்பினரும் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டதாக சொல்கிறார்கள். பின்னர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், மதுரை ஆதீனம் சென்ற கார், அஜிஸ் நகர் மேம்பாலத்தில் செல்லவில்லை. அதற்கு பதிலாக அஜிஸ் நகர் பிரிவு சாலை வழியாக உளுந்தூர்பேட்டை மார்க்கத்தில் அதிவேகமாக சென்றது. அப்போது காலை 9.45 மணிக்கு சேலம்- சென்னை நோக்கி சென்ற மாருதி கார் ரவுன்டானா அருகே மெதுவாக கடந்தது. அப்போது மதுரை ஆதீனம் காரின் பக்கவாட்டில் அந்த கார் உரசியது. இதனால் இரு கார்களும் லேசான சேதமடைந்தன.
பின்னர் இரு தரப்பினரும் வாக்குவாதம் செய்துவிட்டு அந்த இடத்தை விட்டு புறப்பட்டுவிட்டனர். முதற்கட்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி எதுவும் இல்லை. ஆதீனம் பயணம் செய்த கார் டிரைவரின் கவனக்குறைவாலேயே விபத்து நடந்துள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மதுரை ஆதீனம் பயணம் செய்த கார்தான் அதிவேகமாக சென்றது. இவ்வாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications