என்ன ஆச்சு விஜய்காந்துக்கு??
சென்னை: மக்கள் நலக் கூட்டணிக்கு எதிர்ப்புத் தெரிவித்த முக்கிய நிர்வாகிகளை தே.மு.தி.கவில் இருந்து நீக்குவது தொடர்பான பற்றிய அறிவிப்பை அக் கட்சியின் தலைவரான விஜயகாந்த் வெளியிட்டாலும், இதுவரை நேரடியாக விளக்கம் அளிக்கவே இல்லை. மிக முக்கியமான இந்த தேர்தல் நேரத்தில் கூட தனது கட்சியில் ஏற்பட்டுள்ள
சலசலப்பு குறித்து ஒரு விளக்கத்தைக் கூட பத்திரிக்கையாளர்களிடமோ அல்லது கேப்டன் டிவியிலோ கூட விஜய்காந்த் சொல்லாமல் இருப்பதும், இன்னும் பிரசாரத்திற்குக் கூட செல்லாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆரம்பத்தில் எந்த அளவுக்கு மக்கள் மனதில் தேமுதிக விஸ்வரூபம் எடுத்து உயர்ந்து நின்றதோ இன்று அதே அளவுக்கு சரி்ந்து போய்க் காணப்படுகிறது. இந்தக் கட்சியைப் பொறுத்தவரை விஜய்காந்த்துக்குத் தான் ஓட்டே தவிர, சந்திரகுமாருக்கோ பார்த்திபனுக்கோ ஏன் பிரேமலதாவுக்குக் கூட கிடையாது. இது முழுக்க முழுக்க விஜய்காந்த் என்ற மனிதரின் முகத்துக்காக கிடைக்கும் ஓட்டுக்கள் தான்.
ஆனால், கட்சியை அவர் நடத்தவே இல்லை, கட்சி பிரேமலதா வசம் போய்விட்டது என அதிருப்தி தலைவர்கள் வெளிப்படையாக பேட்டி தந்து கொண்டிருப்பதும், அதை உறுதி செய்யும் வகையிலேயே விஜய்காந்த் மற்றும் பிரேமலதாவின் செயல்பாடுகள் இருப்பதும் விஜய்காந்த்துக்கு என்ன தான் பிரச்சனை என்ற கேள்விகளை எழுப்பி விட்டிருக்கிறது.
தேர்தல் நெருங்கும் வரையில் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தால், முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லிக் கொண்டு எப்படி ஓட்டு வாங்க முடியும் என்ற பயம் கட்சியின் நிர்வாகிகளிடையே பரவி வருகிறது. கிங் எங்கே என்ற கேள்விகள் எழுப்பப்பட ஆரம்பித்துவிட்டன. ஆனால், என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கட்சி முழித்துக் கொண்டுள்ளது.
விஜய்காந்த்துக்காக நாங்கள் பேசுவோம் என வைகோ போன்றவர்கள் முந்திரிக்கொட்டைகளாக குதிப்பதும் கூட ஏன் விஜய்காந்தால் பிரச்சாரத்துக்குக் கூட வர முடியாதா என்ற அடுக்கடுக்கான கேள்விகளையே எழுப்புகிறது. விஜய்காந்தின் உடல் நிலை குறித்தும் பல கேள்விகளும் எழுகின்றன.
வரும் 10ம் தேதி சென்னை மாமண்டூரில் உள்ள விஜய்காந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் கல்லூரியில் நடக்கும் ம.ந.கூ- தேமுதிக பொதுக் கூட்டத்தில் விஜய்காந்த் பேசுவார் என்கிறார்கள். பார்ப்போம்....