நாங்களே அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துவோம்.. தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் வார்னிங்
திருவாரூர்: விவசாயிகள் போராட்டத்திற்கு மதிப்பளித்து காவிரி பிரச்சனை தொடர்பாக இனியாவது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்; இல்லையேல் நாங்களே அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவோம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி ஒழுங்குமுறை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு கைதாகினர்.

திருவாரூர் மாவட்டத்தில் இந்த போராட்டங்களுக்கு தலைமை வகித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்கள் போராட்டத்திற்கு தமிழக அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதன் பிறகாவது அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் கூட்ட வேண்டும்.
அதில் காவிரி பிரச்சனை மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து ஆக்க பூர்வமான முடிவு எடுக்க வேண்டும். அந்த முடிவுகளை பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும். இதனை தமிழக அரசு செய்யும் என்று நம்புகிறேன்.
தமிழக அரசு அப்படி செய்யவில்லை என்றால் நாங்களே விவசாயிகள் சங்கங்கள் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து முடிவுகளை எடுப்போம். அதன் அடிப்படையில் ஒரு தூதுக் குழுவை அமைத்து பிரதமரைச் சந்தித்து கோரிக்கை வைப்போம்.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications