தமிழகத்தை காப்பாற்ற அரசியலுக்கு வரவேண்டுமா ரஜினி... என்ன நினைக்கிறார்கள் மக்கள்?
நடிகர் ரஜினி டிசம்பர் 31ல் தனது அரசியல் நிலைப்பட்டை தெரிவிப்பதாக கூறி இருக்கிறார் இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்ற அலசல் இதோ.
Recommended Video
சென்னை : நடிகர் ரஜினி டிசம்பர் 31ல் தனது அரசியல் நிலைப்பட்டை தெரிவிப்பதாக கூறி இருக்கிறார். அரசியலுக்கு வருவேன் என்று சொல்லவில்லை என்னுடைய அடுத்தக்கட்ட நிலைப்பாடு என்ன என்பதைத் தான் சொல்லப்போகிறேன் என்று தெளிவாக கூறி இருக்கிறார் ரஜினி. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்ற அலசல் இதோ.
நான் அரசியலுக்கு புதியவன் அல்ல, 1996ம் ஆண்டு முதலே அரசியலில் இருக்கிறேன். அரசியலின் ஆழம் என்னவென்று எனக்கு தெரியும், தெரியாமல் இருந்தால் உடனே வந்திருப்பேன் என்று ரஜினி இன்று ரசிகர்கள் மத்தியில் பேசிய பேச்சுகள் அனைத்தும் தெளிந்த நீரோடை போல இருந்தது.
இதுவரை அரசியல் குறித்த குழப்ப மனநிலையிலேயே இருந்த ரஜினி, எல்லாத்தையும் மேலே இருக்குறவன் பாத்துக்குவான். ஆண்டவன் என்ன கட்டளையிடுகிறானோ அதையே செய்வேன் என்று பிடிகொடுக்காமலே பேசி வந்தார். ஆனால் ரஜினியின் இன்றைய பேச்சில் ஒரு தீர்க்கம் இருந்தது.
ரஜினி 68 வயதில் அரசியலுக்கு வருகிறார் என்று பலரும் கேலி செய்கின்றனர். ஆனால் மக்களுக்கு சேவை செய்ய நினைப்பவர் எந்த வயதில் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், அவர் என்ன செய்யப் போகிறார் என்பதே முக்கியம் என்று பதிலடி கொடுக்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.
திராவிட கட்சிகளை பார்த்த தமிழகம்
ரஜினி அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி தான் தொடங்குவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களின் தகவல்களாக இருக்கின்றன. தமிழகம் இத்தனை ஆண்டுகளாக திராவிட அரசியலை மட்டுமே பார்த்து வளர்ந்து வந்திருக்கிறது. அப்படி இருக்கையில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ரஜினியின் தனிக்கட்சி ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.
பிற கட்சியினருக்கு கெட் அவுட்
ரஜினி அரசியலுக்கு வந்தால் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று மக்கள் சில பட்டியலே வைத்துள்ளனர். அதில் முதலாவதே என்ன தெரியுமா, பிற கட்சிகளில் இருந்து ரஜினியின் கட்சிக்குத் தாவ நினைப்பவர்களுக்கு முதலில் கெட் அவுட் சொல்ல வேண்டும் என்பதே. ஏனெனில் இதுவரை இருக்கும் அரசியல்வாதிகளின் செயல்களைப் பார்த்து அத்தனை வெறுப்பில் இருக்கின்றனர் மக்கள்.
களையெடுக்கப்பட வேண்டிய ஊழல்
இரண்டாவதாக மக்களின் பிரதானப் பிரச்னையாக இருப்பது ஊழல், லஞ்ச லாவண்யம். அரசின் நலத்திட்டங்கள், உதவித்தொகை என எதைப் பெற வேண்டுமானாலும் ஊழல் தலை விரித்து ஆடுகிறது. பிறப்பு சான்றிதழ் முதல் கான்டிராக்ட்டுகளை பெறுவது வரை எல்லாவற்றிலும் ஊழல் மலிந்துவிட்டது, இதனை ஒழிக்கவே முடியாதா என்ற மக்களின் உளக்குமுறல்களுக்கு ரஜினி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நேற்றைய கிரிமினல்கள்
முன்னாள் கிரிமினல்கள் தான் பெரும்பாலும் அரசியல்வாதிகளாக உலா வருகின்றனர். இவர்களின் அடாவடித் தனத்துடன் அதிகார பலமும் சேர்ந்து விடுவதால் நில ஆக்கிரமிப்பு, மாமூல் வசூல் என்று அனைத்திலும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பாட்ஷாவாக வந்து அநியாயங்களைத் தட்டி கேட்க வேண்டும் ரஜினி என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மக்களை தொல்லைபடுத்தும் சமூக விரோதிகள்
மற்றொருபுறம் அரசியல்வாதிகளின் நெருங்கிய சகாக்கள் என்ற போர்வையில் சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் சமூக விரோதிகள். சட்டத்தின் பிடியில் சிக்காமல் ஜகா வாங்கிக் கொண்டு மக்களுக்குத் தொல்லை கொடுக்கும் கும்பலிடம் இருந்து விடுதலை பெற்றுத் தர வேண்டும் என்பதும் மக்களின் ஆவலாக இருக்கிறது.
சுகாதாரம், அடிப்படை வசிதிகள்
இதே போன்று அனைத்து தரப்பு மக்களுக்கு ஒரே சமமான கல்வி, கல்வி வியாபாரமயத்தை தடுக்க வேண்டும். வேற்றுமையின்றி அனைத்து மக்களுக்கும் சமுதாயத்தில் தரமான சுகாதார மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகளை வைத்துள்ளனர் மக்கள். இவற்றிற்கெல்லாம் தீர்வு காணும் ஒரு தளமாக அரசியலை பயன்படுத்தி அதற்கான கொள்கை, கோட்பாடுகளுடன் ரஜினி களமிறங்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு என்பதைத் தாண்டி இன்றைய தேவையும் கூட.