தோண்ட தோண்ட கிடைக்கும் சசிகலா குடும்பத்தின் ’டுபாக்கூர் நிறுவனங்களின்’ ஜாதகம்
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் சசிகலா குடும்பத்தின் போலி நிறுவனங்களின் ஜாதகம் குறித்த ஆவணங்கள் வசமாக சிக்கி வருகின்றனவாம்.
சென்னை: சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான ஜெயா டிவி உள்ளிட்ட 190 இடங்களில் நடத்தப்பட்ட மிகப் பெரிய வருமான வரி சோதனையில் போலி நிறுவனங்கள் தொடர்பான ஏராளமான ஆவணங்கள் சிக்கியிருக்கின்றனவாம்.
வருமான வரித்துறையின் ஆபரேஷன் கிளீன் மணி நடவடிக்கையின் கீழ் 190 இடங்களில் 2000 வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனையை தொடங்கினர். இந்த சோதனையில் சசிகலா குடும்பத்தின் போலி நிறுவனங்கள், சந்தேகத்துக்குரிய முதலீடுகள் உள்ளிட்டவை தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன.
இந்த ஆவணங்களை தற்போது ஆராய்ந்து வருகிறோம். இதன் பின்னர் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தப்படும். இச்சோதனைக்கு தமிழக அரசு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்தது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் வருமான வரித்துறை அதிகாரிகள். வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் உட்பட யாரையுமே விட்டுவைக்கவில்லை. அத்தனை பேரையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்திருக்கிறது.