ஏற்கனவே உள்ள விதி என்றால் கடந்த ஆண்டு செய்த திருத்தம் என்ன?.... தெளிவுபடுத்தாத டிஎன்பிஎஸ்சி!
கடந்த ஆண்டில் செய்யப்பட்ட திருத்தம் என்ன என்பதை தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம் தெளிவுபடுத்தவே இல்லை.
சென்னை : பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. அப்படியானால் கடந்த ஆண்டில் செய்த திருத்தம் என்ன என்பதை தெளிவுபடுத்தவில்லை.
9 ஆயிரத்து 300 அரசு காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு வெளி மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் இதில் உண்மையில்லை என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது, தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 1955-ம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது. தற்போது இவ்விதி தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கான (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016-ன் பிரிவு 20(7) மற்றும் 21(1)ல் இடம்பெற்று எவ்வித மாற்றமும் இல்லாமல், தேர்வாணையத்தால் நேரடி நியமனத்திற்கான அனைத்துப் பதவிகளுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது.
புதிதான விதிகள் இல்லை
வெளிமாநில விண்ணப்பதாரர்கள் அனைவரும் பொதுப்பிரிவினராகவே கருதப்படுவதால் தமிழக மாநிலத்தில் உள்ளோருக்கான இட ஒதுக்கீட்டில் எந்தவித பாதிப்பும் மாற்றமும் இல்லை. இவ்விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றையே தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 4-ல் அடங்கியுள்ள பதவிகளுக்கான 14.11.2017 நாளிட்ட அறிவிக்கையிலும் கடைபிடித்து வெளியிடப்பட்டுள்ளது. தற்போது புதிதாக ஏதும் தேர்வாணையத்தால் சேர்க்கப்படவில்லை. பிறமாநிலங்களிலும் இந்த விதிமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது என்றும் தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம் அளித்துள்ள விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்தியக் குடிமகனான இருந்தால் போதும்
தேர்வாணைய விதிகளின் படி 20 ஆண்டுகளாக வாய்ப்பளிக்கப்படும் தமிழர் அல்லாதோர் யார் என்று டிஎன்பிஎஸ்சி சட்ட திருத்தத்தில் இடம்பெற்றுள்ளதாவது : தேர்வுக்கு விண்ணப்பிப்பவர் இந்தியக் குடிமகனான இருத்தல் வேண்டும். அல்லது நேபாயம், பூட்டான் அரசின் குடிமகனாக இருத்தல் வேண்டும். இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டு பாகிஸ்தான், பர்மா, இலங்கை, வியட்நாம், கென்யா, உகாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து நிரந்தரமாக குடியமரும் நோக்கத்துடன் இடம்பெயர்ந்தவராக இருத்தல் வேண்டும். இவர்கள் அரசின் குடிமகன் என்ற தகுதிச் சான்றிதழை அரசிடம் இருந்து பெற வேண்டும்.
தமிழ் தெரியாவிட்டாலும் எழுதலாம்
இந்த விதி தான் நடைமுறையில் இருப்பதாக சொல்லப்படுகிறது, இது புலம் பெயர்ந்து வந்து தமிழகத்தில் வாழ்வோருக்காக அரசுப் பணியில் கொடுக்கப்படும் வேலைவாய்ப்பு என்று கருதப்படுகிறது. இதே போன்று மற்றொரு அம்சமும் இதில் உள்ளது குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2வில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். அல்லது உயர்நிலைப் பள்ளிப்படிப்பில் தமிழைப் பயிற்ற மொழியாகக் கொண்டு பள்ளி இறுதிப் பொதுத் தேர்வை தமிழில் எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் மொழித் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விளக்கம் அளிக்காத டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி சொல்வது போல ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் விதிகள் தான் என்றால் அதில் கடந்த ஆண்டு செய்யப்பட்ட திருத்தம் என்ன என்பதை ஏன் வெளிப்படையாக சொல்லவில்லை என்பதே அனைவரின் கேள்வியும். அதோடு வேறு மொழி பேசுபவர் 2 ஆண்டுக்குள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அந்த இரண்டு ஆண்டுகள் அவர் மக்களுடன் இணைந்து செய்யும் பணியில் பாதிப்பு ஏற்படாதா.
மக்களுக்கு சிரமம் ஏற்படாதா?
அதிலும் குறிப்பாக குரூப 4 தேர்வுகள் நடத்தப்படுவது நில அளவையர், சர்வேயர் உள்ளிட்ட அடித்தட்டு மக்களின் வாழ்வியலோடு தொடர்புடைய அரசுப் பணி. இந்தப் பணியில் இரண்டு ஆண்டுகள் தமிழ் தெரியாத ஆட்கள் நியமிக்கப்பட்டால் அது பாதிப்பைத் தானே ஏற்படுத்தும். இதோடு கடந்த 3 ஆண்டுகளில் 66 போட்டித் தேர்வுகளில் 30,098 பேர் விண்ணப்பித்து இவர்களில் 11 வெளிமாநிலத்தவரைச் சேர்ந்தவர்கள் பணியில் இருக்கிறார்கள் என்று டிஎன்பிஎஸ்சி கூறுகிறது.
மாற்றம் வேண்டும்
குரூப் 4 தேர்வுகளில் பெரும்பாலானவை தமிழர் வரலாறு சார்ந்தே இருக்கும், என்ன தான் படித்தாலும் சில விஷயங்கள் நம் மாநில மக்களால் மட்டுமே பதிலளிக்க முடியும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கையில் 11 வெளி மாநிலத்தவர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்றால் வரும் காலத்தில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்படியானால் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டியதும் அவசியமாகிறது.