அடுத்தடுத்து முக்கியஸ்தர்களை இழந்து வரும் தேமுதிக.. மிஞ்சப் போவது யார்?
சென்னை: தேமுதிகவில் அடுத்தடுத்து முக்கியஸ்தர்கள் விலகி வருவது அக்கட்சித் தொண்டர்களைச் சோர்வடைய வைத்துள்ளது.
முதலில் சில முக்கியப் பிரமுகர்கள் கட்சியை விட்டு விலகினர். பின்னர் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து விலகிச் சென்றனர். இந்த நிலையில் உச்சகட்டமாக, கட்சிக்கு உயிர் கொடுத்தவரும், விஜயகாந்த்துக்கு அரசியல் ஆசானுமாக திழ்ந்தவருமான பண்ருட்டியாரே போய் விட்டதால் தேமுதிக வட்டாரம் சற்றே அதிர்ச்சியுடன் உள்ளது.
இப்படியே போனால் கடைசியில் கட்சியில் யார் மிஞ்சுவார்கள் என்ற கேள்வியும் உண்மையான தேமுதிக தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது.

ரசிகர்கள் அரசியல்வாதிகள் ஆன கதை
விஜயகாந்த் ரசிகர்கள் வெள்ளை வேட்டியும், சட்டையுமாக அரசியல்வாதியாக மாறி திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கும் பெரும் சவாலாக மாறியதற்கு விஜயகாந்த் மட்டும் காரணம் இல்லை என்பது மக்களின் கருத்துமாகும். காரணம், அவரை பின்னிருந்து சரியான திசையில் இயக்கி வழி நடத்தியவர் பண்ருட்டி ராமச்சந்திரன்தான்.

அருமையான பிடிவாதம்
விஜயகாந்த் கட்சி மீது மக்களுக்கு அதிக அளவில் ஒரு கட்டத்தில் மரியாதை ஏற்பட்டது. அதற்குக் காரணம், அவரது அருமையான பிடிவாதம்தான் - அதாவது ஒரு காலத்திலும் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம், ஊழலை ஒழிப்போம், மக்களுக்கான ஆட்சியைக் கொடுப்போம் என்று பிடி்வாதமாக விஜயகாந்த் இருந்ததே.. தமிழகத்திற்கு முற்றிலும் வித்தியாசமான இந்தக் கான்செப்ட்டை விஜயகாந்த்துக்கு சொன்னதே பண்ருட்டியார்தான் என்பது பலரும் கூறுகிறார்கள்.

பால பாடம் நடத்தியவர்
அரசியல் என்றால் என்ன, அரசியல்வாதிகள் எப்படிப்பட்டவர்கள், திமுக, அதிமுக ஆகியவற்றின் ரகசியம் என்ன என்பது உள்பட அத்தனையையும் விஜயகாந்த்துக்குக் கற்றுக் கொடுத்தவர் பண்ருட்டியாரும், மறைந்த ராசாராம் போன்றவர்களும்தான்.

தோளோடு நின்றவர்கள் ஓரம் கட்டப்பட்ட பரிதாபம்
ஆனால் யாரெல்லாம் விஜயகாந்ததோடு தோளோடு தோள் நின்று பல்வேறு வகைகளிலும் உறுதுணையாக இருந்தார்களோ அவர்களெல்லாம் கிட்டத்தட்ட இன்று கட்சியில் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மைக்கேல் ராயப்பன்
மைக்கேல் ராயப்பன் அதில் முக்கியமானவர். இவர்தான் விஜயகாந்த் கட்சிக்கு மிகப் பெரிய அளவில் பொருளதவிகள் செய்தவர் என்று பேச்சு அடிபட்டதுண்டு. இன்று இவர் இல்லை.

சுந்தரராஜனே இல்லை...
மதுரையிலிருந்தே விஜயகாந்த்துக்கு நெருக்கமானவர் சுந்தரராஜன். இன்று இவர், விஜயகாந்த்தை மிகக் கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு கடும் காட்டத்துடன் உள்ளார். கட்சியை விட்டும் போய் விட்டார்.

அருண் பாண்டியன் இல்லை
அதேபோலத்தான் கேப்டன் கேப்டன் என்று விஜயகாந்ததை சுற்றிச் சுற்றி வந்தவர் நடிகர் அருண் பாண்டியன். விஜயகாந்த்தாகப் பார்த்துத்தான் அருண் பாண்டியனுக்கு சீட் கொடுத்து சட்டசபைக்கு அனுப்பி வைத்தார். அப்படி நெருக்கமான அருண் பாண்டியனும் இன்று விஜயகாந்த்துடன் இல்லை.

பண்ருட்டியாரும் போய் விட்டார்
இதோ இன்று பண்ருட்டியாரும் போய் விட்டார். இதுதான் தேமுதிகவினரை சற்றே உலுப்பியுள்ளது.

ஜனநாயகம் வேண்டாமா...
ஒரு கட்சி என்றால் அங்கு ஜனநாயகம் இருக்க வேண்டும். சர்வாதிகாரம் கூடவே கூடாது. அப்படி இருந்தால் அது சரிப்பட்டு வராது என்று கூறுவார்கள். அதற்கு தேமுதிக நல்ல உதாரணமாக திகழ்ந்து வருகிறது என்பது நடுநிலையாளர்களின் கருத்து.

அப்படீன்னா திமுக, அதிமுக மட்டும் ஒழுங்கா...?
நியாயமான கேள்விதான். ஆனால் தி்முகவிலும் சரி, எம்.ஜி.ஆரின் அதிமுகவிலும் சரி... யார் மூலமாவது நமது கருத்தை தலைமைக்குத் தெரிவித்து விட முடியும். தலைமையும் அதை ஏதாவது ஒரு வகையில் பரிசீலிக்கும், கவனி்க்கும். எம்.ஜி.ஆர். இருந்தபோது அதிமுகவில் அவர் வைத்ததுதான் சட்டம் என்றாலும் கூட பண்ருட்டியார், திருநாவுக்கரசர், முத்துச்சாமி, காளிமுத்து போன்ற 2ம் கட்ட தலைவர்களின் ஆலோசனையை அவர் புறக்கணித்தது இல்லை. அதேபோலத்தான் திமுக தலைவர் கருணாநிதியும்.

ஆனால் தேமுதிகவில்...
ஆனால் தேமுதிகவில் யார் பேச்சையும் கட்சித் தலைமை மதிப்பதில்லை என்ற பேச்சே அதிகம் உள்ளது. விஜயகாந்த்துக்குப் பிடித்தாற்போல பேசாவிட்டால் அவர் கோபமாகி விடுவார், திட்டுவார் என்று கூறுகிறார்கள். தேர்தல் பிரசாரத்தின்போது ஒரு வேட்பாளர் அடியே வாங்கினார். திருச்சியில் நடந்த பட ஷூட்டிங்கின்போது ஒரு ரசிகரை துரத்தி் துரத்தி அடித்தார் விஜயகாந்த்.

இதெல்லாம் நல்லாவா இருக்கு...
இப்படி பகிரங்கமாகவும் சரி, கட்சிக்குள்ளும் சரி ஒரு விதமான முரட்டுத்தனத்துடன் கட்சித் தலைவர் வலம் வருவதால் தேமுதிக மீதான லயிப்பும், ஈர்ப்பும் பெருவாரியான மக்களிடமிருந்து விலகிப் போய் விட்டதாகவே கூறப்படுகிறது.

இப்படியே போனால்...
நல்ல அறிவுரைகளைக் கூறுவோரையும், கடுமையாக உழைப்போரையும், கட்சிக்காக எதையும் தாங்குவோரையும் படிப்படியாக இழப்பது என்பது ஒரு பெரிய கட்சிக்கு அழகா, சரியா என்பதுதான் நடுநிலையாளர்களின் கேள்வி.












Click it and Unblock the Notifications