சீறிப் பாய்ந்த காளைகள்... தடுக்க முயன்று தெறித்து ஓடிய காவல்துறையினர்..!
சென்னை: தமிழகத்தின் பல கிராமங்களிலும் தடைகளைத் தகர்த்து ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்றவை நடந்தேறின. இவற்றைத் தடுக்க பல இடங்களில் போலீஸார் முயற்சித்தனர். ஆனால் மக்களின் எதிர்ப்பு ஒருபக்கமும், சீறிப் பாய்ந்த காளைகளைத் தடுக்க முடியாமல் தெறித்து ஓடிய சம்பவம் மறுபக்கமும் நடந்தேறியுள்ளன.
பல கிராமங்களில் முடிஞ்சா தடுத்துப் பார்த்துக்கோ என்று மக்கள் சவால் விட்டு காளைகளை அவிழ்த்து விட்டனர். இதனால் இளைஞர்களும், ஊர் மக்களும் உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருது விடும் விழா உள்ளிட்டவற்றை நடத்தி மகிழ்ந்தனர்.
பல ஊர்களில் போலீஸார் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என்று தடுத்தபோது ஊர் மக்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க நேரிட்டது.

சீறி வந்த காளைகள்
வழக்கம் போல பொங்கல் தினத்தன்றும், மாட்டுப் பொங்கல் தினத்தன்றும், நேற்றும் பல கிராமங்களில் காளைகளை அலங்கரித்து வழிபட்டு அவிழ்த்து விட்டனர் மக்கள்.

தடுக்க முடியாமல் தவித்த போலீஸ்
ஜல்லிக்கட்டு நடைபெறாமல் தடுப்பதற்காக சம்பந்தப்பட்ட கிராமங்களில் போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் ஜல்லிக்கட்டை தடுக்க முயன்றபோது மக்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க நேரிட்டது.

பயந்து ஓடிய போலீஸார்
சில கிராமங்களில் காவலர்கள் காளை மாடுகளைப் பிடித்து நிறுத்த முயன்றபோது அவை முட்ட வந்ததால் மிரண்டு ஓடிய காட்சியையும் காண முடிந்தது.

பெண் காவலர்களும்
பெண் காவலர்களும் காளைகளைத் தடுக்க முயன்று அலறி ஓடியதையும் சில கிராமங்களில் காண முடிந்தது. அவர்களைத் தடுத்து காப்பாற்றிய கிராம மக்கள் ஏம்மா இது உங்களுக்குத் தேவையாம்மா என்று கேட்டு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications