விழுப்புரத்தில் 14 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்... கயவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பது ஏன்?
விழுப்புரம் அருகே 14 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், சிறுமியை பலாத்காரம் செய்தவர்கள் தலைமறைவான நிலையில் அவர்கள் இதுவரை கைது செய்யப்படாதது அனைவர் ம
Recommended Video
விழுப்புரம் : விழுப்புரம் அருகே வெள்ளம்புத்தூர் கிராமத்தில் தாய், மகனை கொன்றுவிட்ட 14 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தவர்கள் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது ஏன் என்ற கொந்தளிப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூர் கிராமத்தில் ஆராயி என்ற விதவைப் பெண் தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். கடந்த 3 தினங்களுக்கு முன்னர் ஆராயியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் ஆராயியின் மகன் சமயனை அடித்தே கொன்றுள்ளனர்.
14 வயது சிறுமி என்றும் கூட பாராமல் ஆராயியின் மகளை அந்த வன்முறை கும்பல் கூட்டு பலாத்காரம் செய்துள்ளது. மகளைக் காப்பாற்ற சென்ற ஆராயியும் கடுமையாக தாக்கப்பட்டார். நள்ளிரவு இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. காலையில் வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்த போது 3 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.
மோசமான நிலையில் சிறுமி
இதனையடுத்து அரகண்டநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடலை கைப்பற்றினர். சமயன் உயிரிழந்து விட்ட நிலையில், ஆராயி மற்றும் 14 வயது சிறுமி சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடல் முழுவதும் காயங்களுடன் கிழித்து போட்ட கந்தல் துணி போல பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நிலத்தகராறு காரணமா?
நிலத்தை கைப்பற்றுவதற்காக இந்த கொலை மற்றும் பலாத்கார சம்பவம் நிகழ்ந்ததாகவும், தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சாதிய ரீதியில் நடத்தப்பட்ட வன்முறை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த வன்முறைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
குற்றவாளிகள் தலைமறைவு
ஆனால் சம்பவம் நடந்து 4 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவே இல்லை. குற்றவாளிகள் பற்றிய விவரம் கிடைத்துவிட்டதாகவும், அவர்களை தலைமறைவாக இருப்பதால் அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விழுப்புரம் சிறுமிக்கு நீதி கிடைக்குமா?
டெல்லியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட போது நாடே கொந்தளித்தது. விழுப்புரத்தில் 14 வயதே ஆன சிறுமி கூட்டுபலாத்காரம் செய்யப்பட்டு மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரிய விஷயமாக தெரியவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசின் சிறப்பு கவனம் தேவை
சிறுமியை சிதைத்த கயவர்களை கைது செய்வதோடு அவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் 4 மாதத்திற்கு ஒரு முறை இது போன்ற சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகும் நிலையில் அரசு இந்த விஷயத்தில் மவுனமாக இருக்காமல் உடனடியாக அதிரடியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுகிறது.