தொண்டர்கள் தலைவர்களாவது எப்போது?
-Inkpena சஹாயா
சென்னை: தமிழக அரசியலில், தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அரசியலிலும் வாரிசு அரசியல் என்பது நீண்ட காலமாகவே வேரூன்றி விட்டது. இந்த வரிசையில் சமீபத்தில் முக்கியப் பொறுப்புக்கு வந்துள்ள அரசியல் வாரிசு மு.க.ஸ்டாலின் ஆவார்.
மறைந்த திமுக தலைவர் மு கருணாதி அவர்களுக்கு பிறகு தலைமை பொறுப்பேற்று தளபதி என்று தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஸ்டாலின் ஏகோபித்த ஆதரவுடன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் பொறுப்பேற்ற பின்னர் பேசிய பேச்சுக்களைப் பார்த்த பின்னர் தோன்றிய எண்ணத்தை எழுத்தாக்கியுள்ளேன்.
துரைமுருகன் பேசியபோது "1962 களில் நான் தலைவர் கலைஞரை சந்திக்க போகும்போது அரைக்கால் சட்டையோடு இருந்த சிறுவன் இன்று என்னோடு வளர்ந்து என் தலைக்கு மேல் சென்று எனக்கு தலைவராக மாறி உள்ளார். மகிழ்ச்சி மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டார். ஆனால் ஒரு தந்தையின் மரணத்துக்குப் பிறகு நடக்கும் சராசரி சொத்து சண்டை போல ஸ்டாலின் விவகாரமும் மாறி விட்டது. அவரது அண்ணன் அழகிரி மூலம் திமுகவுக்குள் கலகம் ஏற்படுத்தும் வேலைகள் நடக்கின்றன.
திமுகவில் மட்டுமல்ல இந்த வகை வாரிசு அரசியல் தாக்கம். முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியில் எத்தனையோ அனுபவமிக்கவர்கள் இருக்க அவரோடு இருந்த தோழி என்ற ஒரே உரிமையில் சசிகலா, அதிமுக தலைமையை பிடிக்க நடத்திய நாடகங்கள் தமிழகம் அறிந்ததே. அடுத்தபடியாக சசிகலாவுக்கு ஜெயில் என்று ஆன பின் அவரோடு இருந்த தினகரன் கட்சியை பிடிக்க படாத பாடுபட்டார்.
அதேபோல ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற ஒரே தகுதியோடு ஜெ தீபா அரசியலில் குதித்தார். கட்சிக்காக உழைத்தவர்கள் அனுபவாசலிகள் கட்சியோடு பயணம் செய்தவர்கள் கட்சியின் உண்மையான அடிமட்ட தொண்டன் எல்லாம் உழைத்துக்கொண்டே இருக்க தலைமை என்னவோ வாரிசுகளின் பக்கம் ஓட்டிக் கொண்டே இருப்பதை போன்ற உணர்வு சாமானியனுக்கு தோன்றுவதில் ஆச்சரியம் இல்லை. கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளிலும் இந்த வாரிசுகளின் ஆதிக்கம் இருப்பதைப் பார்க்கலாம், ஓரிரு கட்சிகளைத் தவிர்த்து.
ஸ்டாலினின் ஆளுமை திறனை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இப்போதே ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தும் வேலைகளும் பின்னால் நடந்துகொண்டுதான் உள்ளன. ஸ்டாலின் இருக்கும் இடமெல்லாம் உதயநிதியும் கூடவே இருக்கிறார்.
இதையெல்லாம் பார்க்கும்போது, காலம் காலமாய் கட்சிக்காக உழைக்கும், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள், அனுபவசாலிகள் தலைமையேற்று தலைமை பீடம் அமரும் ஆரோக்கியமான அரசியல் களங்கள் எப்போது வரும் என்ற ஏக்கம் மக்கள் மனதில் எழுகிறது. தன் குடும்பம், அதற்கு சொத்து என்று சேர்க்காமல் மக்களுக்காக மட்டுமே வாழ்ந்து மறைந்து போன காமராஜர் ஆட்சி காலங்கள் இனி தமிழகத்தில் திரும்புமா என்ற தவிப்பிலும் உள்ளன சாமானிய மக்களின் மனங்கள்..!