மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு எப்போது தேர்தல் .. மாநில தேர்தல் ஆணையர் தகவல்
சென்னை: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் தகவல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நேற்று பகல் நிறைவடைந்தது. இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு உடனுக்குடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் பழனிச்சாமி கூறுகையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடந்தது.
இதில் 91 ஆயிரத்து 975 பதவியிடங்களுக்கு நேரடியாக தேர்தல் நடந்தது. இதில் 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவியிடங்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியிடங்கள், 9,624 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்கள் மற்றும் 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் அடங்கும்.

போட்டியின்றி தேர்வு
18 ஆயிரத்து 137 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 410 ஊராட்சி தலைவர்கள், 23 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட 18 ஆயிரத்து 570 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2-ஆம் கட்டம்
முதல் கட்டமாக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகளிலும், 2-ம் கட்டமாக 25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 49 ஆயிரத்து 688 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் 27-ந் தேதி நடந்த வாக்குப்பதிவில் 77.10 சதவீதமும், 2-ம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதமும் வாக்குகள் பதிவாயின.

வாக்கு எண்ணிக்கை
திருவாரூர் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் இறந்ததால், அங்குள்ள வார்டு ஒன்றுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து வார்டு, செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு வார்டு மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றில் தலா ஒரு வார்டு, இதுதவிர 6 பஞ்சாயத்து தலைவர் பதவியிடங்கள் மற்றும் 15 வார்டு உறுப்பினர்களுக்கு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

திருப்தி ஏற்படுத்த
அதாவது மாநிலம் முழுவதும் 25 பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணும் பணியை அமைதியாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் மேற்கொண்டனர். அரசியல் கட்சியினர் பல்வேறு விளக்கங்கள், சந்தேகங்களை எழுப்பினர். அவர்களுக்கு திருப்தி ஏற்படும் வகையில் உரிய பதில்கள் அளிக்கப்பட்டன.

நேர்மை
கடந்த காலங்களில் நடந்த தேர்தலை விட இந்த தேர்தல் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடந்தது. வாக்கு எண்ணும் நடவடிக்கையில் அதிகாரிகளால் குளறுபடிகள் ஏற்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் தேதி
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற நகர்ப்புற ஊராட்சிகளுக்கான தேர்தல் குறித்து முதல் கட்டமாத நடந்து முடிந்தன. அவற்றுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார் பழனிச்சாமி.












Click it and Unblock the Notifications