அழகுத்தமிழ்பேசும் தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டபோது ராகுல் எங்கு போனார்? தமிழிசை நறுக்
இலங்கையில் அழகுத் தமிழ் பேசும் தமிழர்கள் கொல்லப்பட்ட போது ராகுல் எங்கே போனார் என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம்: இலங்கையில் அழகுத் தமிழ் பேசும் தமிழர்கள் கொல்லப்பட்ட போது ராகுல் எங்கே போனார் என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 84வது மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக அரசையும் பாஜக தலைவர்களையும் கடுமையாக விமர்சித்தார்.
தமிழகத்தில் பாஜக அரசு தமிழை அழிக்கப்பார்ப்பதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் ராகுல்காந்தியின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காந்தி பெயர்
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை நீரவ் மோடியுடன் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு பேசுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். காந்தி பெயரை காங்கிரஸ் குடும்பம் தவறகாக பயன்படுத்தி வருகிறது என்றும் தமிழிசை குற்றம்சாட்டினார்.
தமிழிசை பதிலடி
பாமர மக்களை ஏமாற்றுவதற்காக சோனியா தனது பெயருடன் காந்தி பெயரை சேர்த்துக்கொண்டதாகவும் அவர் சாடினார். தமிழகத்தில் வேற்று மொழியை பாஜக திணிக்க பார்ப்பதாக கூறிய ராகுலின் குற்றச்சாட்டுக்கும் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.
ராகுல் எங்கே போனார்?
அழகுத்தமிழ்பேசும் தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டபோது ராகுல் எங்கு சென்றார்? என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் பிழைப்பு நடத்த முடியாததால் தமிழை வைத்து பிழைப்பு நடத்த பார்க்கிறார் ராகுல் என்றும் தமிழிசை குற்றம்சாட்டினார்.
குடும்பத்தின் குரல்
தமிழகம் புறக்கணிப்படுவது போல ஒரு மாயை உருவாக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். காங்கிரஸின் குரல் ஒன்றும் நாட்டின் குரல் இல்லை என்றும் ஒரு குடும்பத்தின் குரல் என்றும் தமிழிசை தெரிவித்தார்.