15 நாட்களாக நிறைய நடக்குதுங்க..."தளபதி" ஸ்டாலின் ஊழலற்றவர்..'2ஜி' ஆசிர்வாதம் ஆச்சாரியின் அடடே பேச்சு
சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுகவின் ஆ. ராசா, கனிமொழி சிறைக்குப் போக காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் ஆ. ராசாவின் முன்னாள் உதவியாளர் ஆசிர்வாதம் ஆச்சாரி.. அவர்தான் தற்போது, "தளபதி" ஸ்டாலின் ஊழல் அற்ற முகம் கொண்டவர்; "தலைவர்" கலைஞர் அவர்கள் இப்போது ஆன்மீகத்தை ஏற்றிருக்கலாம்; கடந்த 10,15 நாட்களாக நிறைய நடைபெறுகிறது... அதையெல்லாம் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு என் வாய் கட்டப்பட்டுள்ளது என்று அதிரடியாக கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம் உதவியாளராக இருந்த ஆசிர்வாதம் ஆச்சாரி திருச்சியை சேர்ந்தவர். அரசு பணியில் பல ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்தவர்.
தகவல் தொடர்பு அமைச்சராக ஆ.ராசா இருந்த போது அவருக்கு சீனியர் பி.ஏ.வாகவும் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில்தான் சர்ச்சைக்குரிய ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு நடைபெற்றதாக வழக்கு நடைபெறுகிறது.
இவ்வழக்கில் ஆ.ராசா, கனிமொழிக்கு எதிரான முக்கியமான அரசு சாட்சியே ஆசிர்வாதம் ஆச்சாரிதான். இப்படியான ஆசிர்வாதம் ஆச்சாரி, சுப்பிரமணியன் சுவாமியை தமது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டு பாஜகவில் ஐக்கியமானார்.
கடந்த சில நாட்களாக சுப்பிரமணியன் சுவாமி திடீரென மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில் சிஷ்யர் ஆசிர்வாதம் ஆச்சாரியும் தந்தி தொலைக்காட்சி நடத்திய நேற்றைய விவாதத்தில் திமுக உடன்பிறப்புகளை புல்லரிக்க வைக்கும் விதமாக பேசிவிட்டார்.
தந்தி டிவியில் ஆசிர்வாதம் ஆச்சாரி தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு இது:
ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையை சுப்பிரமணியன் சுவாமி ஆழமாக பார்த்து கொண்டிருக்கிறார். அவர் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்று நீங்களும் கூறுகிறீர்கள்.
ஊழலற்ற அவருடைய முகத்தை எடுத்துக் கொள்ள எந்த ஒரு தயக்கமும் அவசியம் இல்லை. ஸ்டாலின் கடந்த திமுக ஆட்சியில் துணை முதல்வராகவும் முக்கியமான துறைகளுக்கு அமைச்சராகவும் இருந்தார்.
அவர் எந்த துறைகளில் அமைச்சராக இருந்தாரோ அந்த துறைகளில் எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இது டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிக்கும் தெரியும்.
இந்நிகழ்ச்சிக்கு வரும்முன்னர் சுப்பிரமணியன் சுவாமியிடம் பேசிவிட்டுத்தான் வந்தேன். ஸ்டாலின் மீது சுப்பிரமணியன் சுவாமிக்கு எந்த ஒரு தனிப்பட்ட குற்றச்சாட்டுமே இல்லை.
ஸ்டாலினின் மற்ற குடும்ப உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அதுபற்றி நாம் பேச வேண்டியதில்லை. 2ஜி விவகாரம் உள்ளிட்ட மற்றவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளைத்தான் சுவாமி முன்வைத்திருக்கிறாரே தவிர ஸ்டாலின் மீதோ குடும்பத்தினர் மீதோ புதியதாக எந்த ஒரு குற்றச்சாட்டையும் அவர் முன்வைக்கவில்லை.
கடந்த 10, 15 நாட்களாக நடந்த நிகழ்வுகளை பற்றி இங்கே பேசுகிற திமுக பிரதிநிதி சரவணனுக்கோ மற்றவர்களுக்கோ தெரியாது.
"தளபதி" ஸ்டாலின், நமக்கு நாமே பயணத்தின் போது சிவாச்சாரியார்களையெல்லாம் போய் பார்த்தார். "தலைவர்" கலைஞர் ஒருமுறை நெற்றியில் திருநீறு பூசியதை ஆட்சேபித்தார்.
ஆனால் தளபதி ஸ்டாலின் அவர்கள் பரந்தமனப்பான்மையுடன் சிவாச்சாரியார்களையெல்லாம் சந்தித்து பேசினார். கருணாநிதி ராமானுஜரைப் பற்றி எழுதியதெல்லாம் இப்போதுதான்.. கருணாநிதி ஆன்மீகம் சார்ந்தவற்றை இப்போது ஏற்றுக் கொள்கிறாரோ என சந்தேகம் இருக்கிறது...
கடந்த 10,15 நாட்களாக என்ன நடந்தது என்பது பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. என்னுடைய வாய்கள் கட்டப்பட்டுள்ளன. அதுபற்றி எதுவும் பேசப்போவதில்லை.
இவ்வாறு ஆசிர்வாதம் ஆச்சாரி கூறினார்.












Click it and Unblock the Notifications