மேலும் 4 ராஜ்யசபா எம்பிக்களை பெறப் போகும் அதிமுக 4, திமுகவும் 2 இடங்களில் வெல்லும்
சென்னை: தமிழகத்தில் இருந்து புதிதாக 6 ராஜ்யசபா எம்பிக்கள் ஜூன் மாதம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு பதவிக் காலம் முடியப் போகும் 6 ராஜ்யசபா எம்பிக்கள் பதவிக்கு வரும் ஜூன் மாதம் 11ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 24ம் தேதி துவங்க உள்ளது.

இந்நிலையில் இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவதை அடுத்து காலி இடங்களை நிரப்ப, தேர்தல் நடத்தப்படுகிறது.
தேர்தல் அறிவிப்பு மே 24-ம் தேதி வெளியிடப்படுகிறது. அன்றே வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. மே 31-ம் தேதிக்குள் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். ஜூன் 1-ம் தேதி பரிசீலனை நடக்கும். ஜூன் 3-ம் தேதி மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.
போட்டி இருந்தால் ஜூன் 11-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். அன்று மாலை 5 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். ராஜ்யசபா தேர்தல் நடவடிக்கைகள் ஜூன் 13-ம் தேதியுடன் முடியும்.
ராஜ்யசபா உறுப்பினர்கள் மாநில எம்.எல்.ஏ.க்களாலேயே தேர்வு செய்யப்படுகிறார்கள். தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் யார், யாருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஒருவர் ராஜ்யசபா எம்பியாக 34 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு தேவை. அந்த வகையில் 134 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள அதிமுகவுக்கு 3 ராஜ்யசபா எம்பிக்கள் பதவி நிச்சயம் கிடைக்கும். 98 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள திமுகவுக்கு 2 பதவிகள் நிச்சயம். மீதமுள்ள ஒரு பதவிக்கு இழுபறியாக இருக்கும். ஆனால், குறைந்தபட்ச ஓட்டு அடிப்படையில் இதுவும் அதிமுகவுக்கு கிடைக்க தான் வாய்ப்பு அதிகம்.












Click it and Unblock the Notifications