ஜெ. மரணத்தில் நீதி விசாரணை கேட்பவர்கள்தான் முதலில் விசாரிக்கப்படுவார்கள்.. தினகரன்
ஜெயலலிதா மரணத்தில் நீதிவிசாரணை கேட்பவர்கள் தான் முதலில் விசாரிக்கப்படுவார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரை: ஜெயலலிதா மரணத்தில் நீதிவிசாரணை வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூரில் டிடிவி தினகரன் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
ஆனால் தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 14 எம்எல்ஏக்கள் மற்றும் தினகரன் ஆதரவு நிர்வாகிகள் பலர் இதில் கலந்துகொண்டனர். தினகரன் மற்றும் சசிகலாவின் தீவிர ஆதரவாளர்களான புகழேந்தி மற்றும் நாஞ்சில் சம்பத் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தலைமைக் கழகத் தோற்றம்
விழா மேடை தலைமைக்கழகம் தோற்றத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது. தலைமைச் செயலகம் போன்று நுழைவு வாயில் செட் போடப்பட்டிருந்தது.

பலத்தை காட்டிய டிடிவி தினகரன்
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் என்றாலும் இது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரன் தனது பலத்தை காட்டுவதற்காக நடத்தப்பட்ட கூட்டமாகவே பார்க்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய டிடிவி தினகரனும் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகளை கண்டிக்கும் விதமாகவே பேசினார்

ஒழிந்துபோவார்கள்
எம்எல்ஏக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்பதை தடுக்கும் வகையில் அவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் எம்எல்ஏக்களை ஒளித்து வைத்துள்ளவர்கள் ஒழிந்துப் போவார்கள் என்றும் அவர் கூறினார்.

ஓபிஎஸை நக்கலடித்த டிடிவி
இதைத்தொடர்ந்து ஓபிஎஸின் தர்மயுத்தம் குறித்து பேசிய டிடிவி தினகரன் தர்மத்தோடு யுத்தம் நடத்துபவர்கள் தர்மயுத்தம் நடத்துவதாக கூறுகின்றனர் என்றும் டிடிவி தினகரன் நக்கலடித்தார். நீதி விசாரணை கேட்பவர்கள் தான் முதலில் விசாரிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

மடியில் கனம் இல்லை
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கூறினார். எங்களுக்கு மடியில் கனம் இல்லை என்றும் டிடிவி தினகரன் கூறினார்.












Click it and Unblock the Notifications