தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளர் யார்? எடப்பாடி பழனிசாமியிடம் 2 ஆப்ஷன்கள்!
தென்காசி: தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் யாரை நிறுத்துவது என்ற விவகாரத்தில் 2 ஆப்ஷன்களை கையில் வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
தென்காசி தொகுதி: தென்காசி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், ஸ்ரீவில்லிபுதூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி உள்ளன. கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதி என்பதால் இயற்கை எழில் கொஞ்சும் தொகுதியாக தென்காசி திகழ்கிறது. சுற்றுலாவும், விவசாயமும் தொகுதியின் பிரதான தொழிலாக பார்க்கப்படுகிறது.

சிட்டிங் எம்.பி.: இந்நிலையில் திமுக சார்பில் சிட்டிங் எம்.பி. தனுஷ்குமாரே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அதிகம் என்றாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தென்காசி மீது ஒரு கண் வைத்துள்ளன. இதனிடையே அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி எம்.பி. வேட்பாளராக நிறுத்தப்படலாம் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மத்தியில் புதிய தமிழகம் அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகும் பட்சத்தில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி கொடுக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தென் தமிழகம்: இதனிடையே லோக்கல் அதிமுக பிரமுகர்கள் சிலர் தென்காசி தொகுதியில் அதிமுக தான் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை கட்சித் தலைமைக்கு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவு தான் இறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது. தென்காசி மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை தென் தமிழகத்தில் இருக்கும் ஒரே தனித் தொகுதியாகும். இதனால் அங்கு போட்டி சற்று வலுவாகவே இருக்கும்.
கூடுதல் தகவல்: அருகாமை மாவட்டங்களான நெல்லை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த பிரமுகர்களும் சீட் கேட்கக் கூடும் எனத் தெரிகிறது. முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமியை பொறுத்தவரை மீண்டும் 2026 சட்டமன்றத் தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடவே விருப்பப்படுகிறார் என்பது கூடுதல் தகவலாகும்.












Click it and Unblock the Notifications