தூத்துக்குடி திமுகவின் அடுத்த தளபதி யார்? அனிதாவா? ஜோயலா?
தூத்துக்குடி திமுகவின் மிகபெரிய தூணாக இருந்த பெரியசாமியின் மரணம், அம்மாவட்டத்தில் அடுத்த தளபதி யார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 30 ஆண்டுகாலமாக கோலோச்சி வந்த முரட்டு பக்தர் பெரியசாமி மரணமடைந்துள்ளார். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட திமுகவின் அடுத்த தளபதி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் இருந்து திமுகவிற்கு சென்ற அனிதா ராதாகிருஷ்ணனா? அல்லது மதிமுகவில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவிற்கு சென்ற ஜோயலா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தூத்துக்குடியில் பெரியசாமி, அவரது மகன் ஜெகன், மகள் கீதாஜீவன் ஆகியோர் வைத்ததுதான் எழுதப்படாத சட்டம். இந்த சூழ்நிலையில்தான் திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவில் முக்கிய நபராக உருவெடுத்தார்.
அனிதா ராதாகிருஷ்ணன்
2009ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், அழகிரியால் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்தாலும் பெரியசாமியின் மிகப்பெரிய அரசியலுக்கு முன்னால் தாக்குபிடிக்க முடியவில்லை. இதனால் மீண்டும் அதிமுகவிற்கு செல்ல முயன்றார். ஆனால் கதவு திறக்கவேயில்லை. மீண்டும் திமுகவில் தஞ்சமடைந்தார். ஸ்டாலின் புண்ணியத்தால் சீட் பெற்று எம்எல்ஏவாகியுள்ளார்.
அனிதாவின் அரசியல்
ஆளுங்கட்சிக்கு எதிராக அரசியல் செய்து வரும் அனிதா ராதாகிருஷ்ணன், தனக்கென ஒரு ஆதரவாளர்கள் வட்டத்தை தூத்துக்குடி திமுகவில் தக்கவைத்துள்ளார். பெரியசாமிக்கு கொஞ்சம் குடைச்சல் பார்த்த ஜெயதுரை எம்பியும் நாளடைவில் காணமல் போய்விட்டார்.
பெரியசாமிக்கு தலைவலி
இந்த சூழ்நிலையில்தான் மதிமுகவின் இளைஞர் அணியில் இருந்த ஜோயல் திடீரென திமுகவில் இணைந்தார்.
பெரியசாமியை சந்தித்து ஆசி பெற்ற கையோடு அண்ணாச்சி சொல்லே மந்திரம் என்று பாசமழை பொழிந்தார், ஆனாலும் அவரது அடுத்தடுத்த நகர்வுகள் பெரியசாமிக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தலைமைக்கு புகார் தெரிவித்தார்.
ஜோயல் மீது குற்றச்சாட்டு
கட்சித்தலைமையும், ஜோயலை கண்டித்து காட்டமான அறிக்கை வெளியிட்டது. ஆனாலும் ஸ்டாலினின் ஆசியிருந்த காரணத்தால் தூத்துக்குடியில் கீதாஜீவன், ஜெகன், பெரியசாமியை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
அடுத்த தளபதி யார்?
திமுகவின் முக்கிய தூண் போல விளங்கிய பெரியசாமி இன்று உடல்நலக்குறைவினால் மரணமடைந்து விட்டார். அவருக்குப் பின்னர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பதவி யாருக்கு கிடைக்கும் என்பதே இப்போதய கேள்வி. அதிமுகவில் இருந்து வந்த அனிதா ராதாகிருஷ்ணனா? அல்லது மதிமுகவில் இருந்து வந்த ஜோயலா? யாருக்கு பதவி கொடுத்து தளபதியாக்கப் போகிறார் ஸ்டாலின் என்பதே இப்போதய கேள்வியாக உள்ளது.