கருணாநிதியின் அடுத்த வாரிசு யார்?.. எதிர்பார்ப்பில் திருவாரூர் மக்கள்!
கருணாநிதியின் சொந்த தொகுதியான திருவாரூரில் போட்டியிடுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: கருணாநிதியின் சொந்த தொகுதியான திருவாரூரில் போட்டியிடுவது யார் என்ற எதிர்பார்ப்பில் அத்தொகுதி மக்கள் உள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை என்ற கிராமத்தில் பிறந்தவர் திமுக தலைவர் கருணாநிதி.
இவர் இந்த தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக இடங்களில் வெற்றி பெற்றவர் கருணாநிதி. இவர் கடந்த 7-ஆம் தேதி உடல்நல குறைவுகளால் மரணமடைந்தார்.
யார் போட்டி
இதையடுத்து கருணாநிதியின் திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த தொகுதியில் யார் போட்டியிடுவர் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆர் கே நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட்டை இழந்தது.
அதிக வாய்ப்பு
இந்நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் என்பது திமுகவின் கெளரவப் பிரச்சினை என்பதால் வெயிட்டான வேட்பாளரை போடவோ அதிலும் குடும்ப உறுப்பினர் ஒருவரையே நிறுத்தும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
ராஜீவ்- ராகுல்
எப்படி இந்திரா வென்ற ரேபரேலி மக்களவை தொகுதியில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி தொடர்ந்து போட்டியிடுகிறாரோ, ராஜீவ் காந்தி போட்டியிட்ட அமேதி தொகுதியில் அவரது மகன் ராகுல் காந்தி போட்டியிடுகிறாரோ அதேபோல திருவாரூரில் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை போட்டியிட வைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
யார் போட்டியிடுவர்
அது போல் வெயிட்டான வேட்பாளராக திமுக தலைவர் கருணாநிதியின் கவிதை வாரிசான கனிமொழியோ அல்லது ஸ்டாலினின் அரசியல் வாரிசான உதயநிதி ஸ்டாலினோ அல்லது ஸ்டாலினின் மனைவியான துர்கா ஸ்டாலினோ நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
7 முறை வெற்றி
இவர்களில் யார் நிறுத்தப்பட்டாலும் திமுக வெற்றி பெறுவது உறுதி என்றாகிவிட்டது. ஏனெனில் திருவாரூர் திமுகவின் கோட்டையாக திகழ்கிறது. திருவாரூர் தொகுதியில் கடந்த 1962-ஆம் ஆண்டு முதல் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 1971-ஆம் ஆண்டும் 1977-ஆம் ஆண்டும் 2011-ஆம் ஆண்டும், 2016-ஆம் ஆண்டும் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றார். அதுபோல் திருவாரூர் தொகுதியில் 13 முறை நடந்த தேர்தல்களில் திமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது.