பிற மாநிலங்களில் சரவெடியாக பறந்த காவி.. 22 ஆண்டு கால குஜராத் கோட்டையில் ஏன் இந்தப் போராட்டம்?
நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் எல்லாம் பாஜக வெற்றி பெற்ற நிலையில், 22 ஆண்டுகள் ஆட்சி செய்யும் குஜராத்தில் வெற்றிக்கனியை பறிக்க அல்லல்படுவதேன்.
Recommended Video
சென்னை : நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் கூட தேசியத்தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டத்தால் காவிக் கொடி பறந்தது. ஆனால் 22 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் பாஜகவிற்கே தண்ணி காட்டி வருகிறது காங்கிரஸ். இதற்கான காரணங்கள் என்ன?
22 ஆண்டுகளாக பாஜகவின் இரும்புக் கோட்டையாக இருந்து வருகிறது குஜராத் மாநிலம். பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மன்னின் மைந்தன் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்களை எப்படி பார்க்கிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை பார்த்தே குஜராத் மக்கள் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை ஏற்றுள்ளனர் என்று பாஜகவினர் பெருமையோடு கூறினர். ஆனால் பாஜகவின் நம்பிக்கைகளை தகர்த்து 32 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக முன்னிலை இடங்களை காங்கிரஸ் பெற்று வருகிறது.
மற்ற மாநிலங்களில் கொடி நாட்டிய பாஜக
பிரதமராக நரேந்திர மோடி ஆட்சி அமைத்ததும் தேசிய தலைவர் அமித்ஷாவோடு கைகோர்த்து நாடுமுழுவதும் காவிக்கொடியை பறக்க விடுவது தான் அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. இதில் வெற்றியும் கண்டது பாஜக என்றே சொல்லாம். உத்திரபிரதேச சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றி கண்டு அங்கு ஆட்சி அமைத்தது பாஜக, பீஹாரில் நிதிஷ்குமார் லாலுபிரசாத் யாதவ் கூட்டணி உடைந்த போது நிதிஷ்குமாருக்கு ஆட்சியமைக்க ஆதரவளித்து அங்கும் ஆட்சியில் இடம்பெற்றது.
கலக்கத்தில் பாஜக தலைவர்கள்
இதே போன்று உத்ராகண்ட், மணிப்பூர், கோவாவிலும் பாஜக இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்தது. கேரளாவிலும், தமிழகத்திலும் பாஜக நுழைய எடுத்தமுயற்சிகள் எதுவும் எடுபடவில்லை. இதனிடையே குஜராத் தேர்தலில் தலைவர்கள் பிசியாக தற்போது வெளியாகி வரும் தேர்தல் முன்னிலை நிலவரங்கள் அவர்களை கலங்கடிக்க வைத்துள்ளது.
பின்னடைவு ஏன்?
22 ஆண்டுகளாக தொடர்ந்து ஒரே கட்சி ஆட்சியில் இருக்கிறது. எனினும் மாநிலத்தில் வளர்ச்சி இல்லை என்று காங்கிரஸ் கட்சி செய்த பிரச்சாரம் ஓரளவு மக்களின் எதிர்ப்பை வெளிக்காட்டி இருக்க வாய்ப்பு இருக்கிறது. மற்றொரு புறம் இளைஞர்கள் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் கூறி இருந்தார்.
இளைஞர்களின் எழுச்சியா?
அவ்வாறு இளைஞர்கள் வாக்களித்திருக்கும் பட்சத்தில் வேலைவாய்ப்பின்மையை ஒழிக்க பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அந்த கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதுவே காங்கிரஸ், பாஜக இடையேயான வாக்கு சதவீத வித்தியாசம் கூட 2 சதவீதம் என்றே சொல்லப்படுகிறது.
ஓட்டை பிரித்ததா காங்கிரஸ்
இதே போன்று இந்த தேர்தலில் பாஜகவிற்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்திய விஷயங்கள் ஓபிசி, பட்டியல் இனத்தார் இட ஒதுக்கீடு மற்றும் தலித் பிரச்னைகள். இளம் தலைவர்கள் அல்பேஷ் தாகூர், ஹர்திக் படேல், ஜிக்னேஷ் மேவானியை வைத்து காங்கிரஸ் ஓட்டை பிரித்துள்ளது என்றும் கூட சொல்லாம்.
பாஜகவை தண்ணி குடிக்க வைத்தவர்கள்
பட்டியல் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இடஒதுக்கீட்டு பிரச்னைக்காக களத்தில் பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தார் ஹர்திக் படேல். இதே போன்று தலித் உரிமைகள் என்ற கோஷத்தோடு முதன்முறையாக தலித் மக்களின் இளம் தலைவராக தேர்தல் களமிறங்கினார் ஜிக்னேஷ் மேவானி, ஓபிசி பட்டியலில் பட்டியல் இன மக்களை சேர்க்கக் கூடாது என்று களமிறங்கினார் தாகூர். இவர்களின் வரவும் பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.