ஆர்கே நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாமல் போனதற்கு யார் காரணம்?
ஆர்கே நகர் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாமல் போனதற்கு காவல்துறையின் போதுமான ஒத்துழைப்பு இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது. தேர்தலை நியாயமாக நடத்த ஆணையம் என்ன செய்திருக்க வேண்டும்.
Recommended Video

சென்னை : சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் பணம் பூந்துவிளையாடுகிறது, அதிலும் காவல்துறையினரின் கண் எதிரே அவர்களின் முழு ஒத்துழைப்போடு தான் இது நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஒரு வேளை காவல்துறை ஒத்துழைத்திருந்தால் பணப்பட்டுவாடா தடுக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அப்படி செய்யாமல் போனதற்கு என்ன காரணம்?
ஆர்கே நகர் தேர்தல் சிறப்பான முறையில் நடத்தப்படும், காவல்துறையினர் போதுமான ஒத்துழைப்பு தருவதாக சென்னை மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கார்த்திகேயன் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் உண்மையில் நிலவரம் என்னவென்றால் ஆர்கே நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க காவல்துறையினர் ஒத்துழைக்கவில்லை என்பது தான் எதிர்க்கட்சியின் குற்றச்சட்டாக உள்ளது.

ஆர்கே நகர் தொகுதியில் இரவு நேரங்களில் தான் பணப்பட்டுவாடா செய்யப்படுவதால் மாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை வேட்பளார்கள் யாரும் வாக்காளர்கள் வீடுகளுக்கு சென்று வாக்கு சேகரிக்கக் கூடாது என்று தடை போட்டது தேர்தல் ஆணையம். ஆனால் எங்களுக்கு என்ன பயம் இருட்டில் இல்லை என்றால் வெளிச்சத்திலேயே தில்லா பணத்தை வாரி இறைப்போம் என்று வெளியூர் ஆட்களை இறக்கி ஜரூராக பணப்பட்டுவாடா நடந்தது.
இதில் கொடுமை என்னவென்றால் பணப்பட்டுவாடா முழு போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது என்பது தான் திமுகவின் புகார். போலீசாரின் முன்னிலையில் தான் பணப்பட்டுவாடாவே நடக்கிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
இது ஒருபுறம் என்றால் காவல்துறையினர் ஆர்கே நகர் தொகுதியை சுற்றி இருக்கும் விடுதிகளில் சோதனை நடத்தி இருந்தாலே பணப்பட்டுவாடாவை தவிர்த்திருக்க முடியும் என்கின்றனர் வருமான வரித்துறையினர். பெரும்பாலும் ஆர்கே நகரில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டது வெளி மாநிலத்தவர்களே தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத ஆட்கள் தான் அதிக அளவில் உளவுவதாகவும் கூறப்படுகிறது.
ஆர்கே நகரில் வரும் புகார்களை விசாரிக்கவே முடியவில்லை தேர்தலை நிறுத்தி விடலாம் என்று தேர்தல் ஆணையத்திடம் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் இந்த முறையும் தேர்தல் தடைபட்டால் அது ஆணையத்திற்கு அவபெயர். அதோடு தேர்தல் ஏற்பாடுகளுக்காக சுமார் ரூ. 3 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது என்பது ஆணையத்தின் தகவல்.
வேட்பாளர்கள் ஒருவர் மீது ஒருவர் புகார், பணப்பட்டுவாடாவை தடுக்கவில்லை என்று ஆளாளுக்கு குற்றச்சாட்டு என்று புகார் பட்டியல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டு வருகிறது. என்றாலும் தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் பணப்பட்டுவாடாவை நிறுத்தவே முடியாதோ என்ற ஜனநாயகத்தின் மோசமான முன்உதாரணமாகி வருகிறது ஆர்கே நகர் தேர்தல். எதிர்காலங்களிலாவது தமிழகத்தில் தேர்தலை நடத்தும்போது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தனி விதிகளை தேர்தல் ஆணையம் வகுக்குமா?












Click it and Unblock the Notifications