சசிகலா ஆதரவாக இருந்த தீபக் திடீரென ஓபிஎஸ் ஆதரவாளராக மாறியது ஏன்?
சசிகலா ஆதரவாளராக இருந்து நேற்று வரை டிடிவி தினகரனின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் திடீரென ஓபிஎஸ் ஆதரவாளராக மாறியுள்ளார்.
சென்னை: அதிமுக பொதுச் செயலாளரான சசிகலாவை 'அத்தை, அத்தை' என்றும் அவரது உறவினரான டிடிவி தினகரனின் பின்னால் நேற்று வரை சுற்றிக் கொண்டிருந்தும் வந்த தீபக் திடீரென ஓபிஎஸ்சின் ஆதரவாளராக மாறியுள்ளார்.
ஜெயலலிதா மறைந்த போது சசிகலாவுடன் சேர்ந்து தீபக்தான் மெரினா கடற்கரையில் இறுதி சடங்குகள் செய்தார். சசிகலாவையும் தீபக் 'அத்தை'என்றுதான் அழைத்து வந்தார்.
சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் தீபக் திடீர் பல்டி அடித்துள்ளார். அதுவும் டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலாளராக அறிவித்து ஒருவாரம் ஆன பின்னர், தீபக் ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா சடங்கு
ஜெயலலிதா மறைந்த பின்னர் அவரது இறுதிச் சடங்கை சசிகலாதான் முழுமையாக செய்தார். என்றாலும், அவருடன் ஜெயலலிதாவின் உறவினர் என்பதால் தீபக் சசிகலாவுடன் கடைசி வரை இருந்தார்.

தீபா பற்றி பேசாதீர்
தீபக்கின் சகோதரியான தீபா, சசிகலாவை எதிர்த்து பேசிய போதும், "அவள் அப்படித்தான், அத்தை ரொம்ப நல்லவங்க, அதனால் தீபாவைப் பற்றி என்னிடம் பேசாதீர்கள்" என்று சொல்லி சசிகலாவுடனும் அவர்களது உறவினர்களுடனும் மிகவும் நெருக்கமாகவே இருந்தார் தீபக்.

திடீர் எதிர்ப்பு
சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா சிறைக்கு செல்லும் முன் தனது உறவினரான டிடிவி தினகரனை துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார். அப்போதும் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல் அவர்களுடன் நெருக்கமாகவே இருந்தார் தீபக். அதன் பின்னரும் கூட டிடிவி தினகரனுடன் தீபக் சுற்றினார்.

திடீர் பல்டி
ஆனால், திடீரென ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்து தீபக் பேசி வருகிறார். டிடிவி தினகரன், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து முறைப்படி துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று செய்தியாளர்களுக்கும் பேட்டியும் அளித்துள்ள நிலையில், இதனை விரும்பாத தீபக் ஓபிஎஸ் அதிமுகவின் பொதுச் செயலாளராக வர வேண்டும் என்று திடீரென்று போர்க் கொடி தூக்கியுள்ளார். இது சசிகலா ஆதரவு அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications