கலைஞர் அறிவாலயத்தில் நடந்த மிஸ் கூவாகம் போட்டி.. கூண்டோடு புறக்கணித்த கலெக்டர், எஸ்பி.!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் நடந்த கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழாவில் அமைச்சர்கள், அதிகாரிகள் என யாரும் பங்கேற்கவில்லை. இதனால் திருநங்கையர் மத்தியில் வருத்தம் நிலவியது.
கூத்தாண்டவர் கோவிலில் வருடா வருடம் நடைபெறும் சித்திரைத் திருவிழா அகில இந்திய அளவில் பிரசித்தி பெற்றது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திருநங்கையரும், வெளிநாட்டினரும் கூட பங்கேற்கிறார்கள். லட்சக்கணக்கானோர் கூடி இந்த திருவிழாவை சிறப்பிக்கின்றனர்.

வருடா வருடம் இந்த திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. சித்திரைத் திருவிழாவின்போது கூவாகம் கிராமமே திருவிழாக் கோலம் பூண்டு காணப்படும். மேலும் விழுப்புரத்திலும் விடுதிகள் நிரம்பி வழியும். எங்கு பார்த்தாலும் திருநங்கையர் கூட்டமாகவே காணப்படும்.
மிஸ் கூவாகம் அழகிப் போட்டி, பேஷன் போட்டி உ்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படுகிறது. இதை சமூக நலத்துறைதான் நடத்துகிறது. இந்த முறை சமூக நலத்துறை அமைச்சர் வர்மதி, ஊரகத் தொழில்துறை அமைச்சர் மோகன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் வரவில்லை. அதிகாரிகளும் யாரும் வரவில்லை.

மிஸ் கூவாகம் அழகிப் போட்டியிலும் கலெக்டர் சம்பத், எஸ்.பி. நரேந்திரன் நாயர் ஆகியோர் வரவில்லை. இந்தப் போட்டி நடந்த இடம் விழுப்புரம் கலைஞர் அறிவாலய அரங்கு என்பதால்தான் அவர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது. மாவட்ட திமுக தலைமை அலுவலகம்தான் கலைஞர் அறிவாலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா திருநங்கையர் நலனுக்கான தனி நபர் மசோதாவைக் கொண்டு வந்து அது நிறைவேறியது. இதனால் திமுக மீது திருநங்கையர்களுக்கு பெரும் அபிமானம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விழுப்புரத்தில் நடந்த விழாவும் திமுக அலுவலகத்தில் நடந்ததால் அதிமுக தரப்பில் கடும் அதிருப்தியுடன் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால்தான் இந்த ஆண்டு கூத்தாண்டவர் விழாவுக்கு அமைச்சர்களோ, அதிகாரிகளோ வராமல் புறக்கணித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications