கால் எடுக்காத செந்தில் பாலாஜி.. போனை போட்ட அமுதா ஐஏஎஸ்.. களமிறங்கிய உதயநிதி.. என்ன நடக்குது?
சென்னை: கரூரில் ரெய்டுக்கு வந்த வருமானவரித்துறையினருக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு முழுக்க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்து வருகிறது. முதலில் 40 இடங்களில் ரெய்டு நடப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 200 இடங்களில் ரெய்டு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. அங்கு சோதனை செய்ய சென்ற அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை முற்றுகையிட்ட திமுக தொண்டர்கள் அவர்களிடம் ஐடி கார்ட் கேட்டு விவாதம் செய்துள்ளனர். இதில் ஒரு அதிகாரி கோபம் அடைந்து திமுக தொண்டர்களை தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. திமுக தொண்டர்களில் ஒருவரை பெண் அதிகாரி ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது
இதையடுத்து அங்கு திமுக நிர்வாகிகள் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர். இந்த எதிர்ப்பு காரணமாக அதிகாரிகள் அப்பகுதியில் இருந்து புறப்பட்டனர். செந்தில் பாலாஜி வீட்டிற்கு வெளியே வருமானவரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடி திமுகவினரால் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய அதிகாரிகள் பாதுகாப்பு கருதி கரூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கே இவர்கள் போலீசில் புகாரும் அளித்துள்ளனர்.

ரெய்டு மோதல்:
இந்த நிலையில், ரெய்டுக்கு வந்த வருமானவரித்துறையினருக்கு எதிராக செந்தில் பாலாஜி ஆட்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் கார்கள் உடைக்கப்பட்டன. கரூர் முழுக்க ரகளையில் ஈடுபட்டு வருகிறார்கள் அமைச்சரின் ஆதரவாளர்கள். இதனால் சட்டம் ஒழுங்குக்கு பிரச்சனையாகி வருகிறது. இதனை எப்படி கையாள்வது ? செந்தில்பாலாஜியிடம் யார் பேசுவது ? என்ற குழப்பத்திலேயே போலீஸ் அதிகாரிகள் தவித்தனர்.
உள்துறை செயலாளர் அமுதா, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஃபோன் செய்திருக்கிறார். ஆனால் அவர் எடுக்கவில்லை. உடனே உதயநிதியை தொடர்புகொண்டு அமுதா பேச, உடனே செந்தில் பாலாஜியை தொடர்புகொண்ட உதயநிதி, " கரூரில் உங்க ஆட்களை அமைதியா இருக்கச் சொல்லுங்க. ரெய்டுக்கு எதிர்ப்பு காட்டுறோம்ங்கிற பேர்ல சட்டம் ஒழுங்குக்கு பிரச்சனையாகுது. அப்பா (முதல்வர்) ஊரில் இல்லாத நிலையில இதெல்லாம் ஜூரனிக்க முடியல. உங்க ஆட்கள கட்டுப்படுத்துங்க" என்று கடுமையாக எச்சரித்திருக்கிறார்.
செந்தில் பாலாஜி, தனது சகோதரரிடம் பேச, ரகளையில் ஈடுபட்ட ஆதரவாளர்களிடம் அமைதி காக்க சொன்னார் செந்தில் பாலாஜி சகோதரரர் அசோக். இதற்கிடையே, செந்தில் பாலாஜியை எச்சரித்த கையோடு அமுதாவை தொடர்பு கொண்ட உதயநிதி, " சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் யார் ஈடுபட்டாலும் சட்டபடி நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு நீங்கள் சொல்லலாம் மேடம் " என்று தெரிவித்திருக்கிறார்.

அமைதியாக இருக்க வலியுறுத்தியும் செந்தில் பாலாஜி ஆட்கள் அமைதி காக்க மறுத்து வருகிறார்கள். காரணம், அமைச்சரின் படை பலத்தை திமுக தலைமைக்கும் மற்ற அமைச்சர்களுக்கு உணர்த்துவதற்கும் தான் செந்தில் பாலாஜியின் சகோதரர் இதையெல்லாம் செய்கிறார் என்கிறார்கள் உளவுத்துறை போலீஸ்.
இந்த நிலையில், ஜப்பானில் நிகழ்ச்சியில் முதல்வர் பிசியாக இருப்பதால் தமிழகத்தில் நடக்கும் தகவல்களை உடனுக்குடன் ஸ்டாலினிடம் தெரிவிக்க முடியாமல் அதிகாரிகள் தவித்துள்ளனர். இதனால் உதயநிதிக்கு தகவலை தெரிவித்தபடி இருக்கின்றனர். அவர் மூலமாகவே ஜப்பானுக்கு தகவல் பாஸ் ஆகிக்கொண்டிருக்கிறது












Click it and Unblock the Notifications