சபாநாயகர் தனபாலை திடீரென முதல்வராக முன்னிறுத்தும் சசிகலா குடும்பம்... அடடே வியூகம்!
சபாநாயகர் தனபாலை திடீரென முதல்வராக சசிகலா குடும்பம் முன்னிறுத்தி வருகிறது.
சென்னை: சபாநாயகர் தனபாலை திடீரென முதல்வராக சசிகலா குடும்பம் முன்னிறுத்துவதன் பின்னணி குறித்து வியக்க வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சசிகலா, தினகரன் சிறைக்கு சென்ன்ற பின்னர் அதிமுகவிலும் கட்சியிலும் கொங்கு லாபி கை ஓங்கியது. இதை சசிகலா குடும்பம் சற்றும் எதிர்பார்க்கவும் இல்லை...ரசிக்கவும் இல்லை.
இதன் உச்சமாக தினகரன் துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து ஆளுக்கொரு திசையில் திரும்பிக் கொண்டிருந்த சசிகலா குடும்பம் கைகோர்த்தது.
களமிறங்கிய திவாகரன்
திரைமறைவில் இருந்த திவாகரன் பகிரங்க அரசியலில் குதித்தார். திவாகரனும் தினகரனும் கைகோர்த்து விஸ்வரூபமெடுத்தனர். ஜாதி ரீதியாக தினகரனுக்கு மிகப் பெரும் ஆதரவு திரண்டதை மேலூர் கூட்டம் வெளிப்படுத்தியது.
எடப்பாடியாருக்கு எதிர்ப்பு
இதை எதிர்கொள்ள வேறுவழியே இல்லாமல் ஓபிஎஸ் அணியுடன் எடப்பாடி தரப்பு கைகோர்த்தது. இதற்கு செக் வைக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என கூறி தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளனர்.
முதல்வராக சபாநாயகர் தனபால்
அத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் எனவும் தினகரன் எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர். அதேநேரத்தில் திவாகரனோ, கூவத்தூரில் இருந்தபோதே சபாநாயகர் தனபாலையே முதல்வராக்க சசிகலா விரும்பினார்; அப்போது நடக்காமல் போனதாலேயே எடப்பாடி முதல்வரானார். இப்போது சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும்; எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என அதிரடி காட்டுகிறார்.
கொங்கு லாபிக்கு செக்
கொங்கு மண்டலத்தில் 20% தலித் வாக்குகள் உள்ளன. கவுண்டர், தலித் வாக்குகள் இணைந்துதான் அதிமுகவின் கோட்டையாக கொங்கு மண்டலத்தை உருவாக்கி வைத்துள்ளது. இப்போது கவுண்டர் சமூகத்து எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் கைகோர்த்து அதிமுகவை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். இதை உடைக்கும் வகையில்தான் அதே கொங்கு மண்டலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த தனபாலை முதல்வராக முன்னிறுத்துகிறது சசிகலா குடும்பம்.
ஜெ. விசுவாசி
அத்துடன் அதிமுகவினரால் தொடர்ந்து ஒதுக்கி வைக்கப்பட்ட தனபாலை அனைவரும் வணங்க வேண்டும் என்பதற்காகவே அவரை சபாநாயகராக்கியவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் பெரும் நம்பிக்கைக்குரியவராக இருந்த தனபாலை முதல்வராக்குவதில் என்ன தவறு? என லாஜிக் பேசுகிறது சசிகலா தரப்பு. கொங்கு லாபிக்கு செக் வைக்கும் சசிகலா தரப்பின் கை கூடுமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.