திருச்சி சிவாவை அடித்த சசிகலா புஷ்பா மீது திமுக ஏன் போலீசில் புகார் தரவில்லை? கேட்கிறார் திருமா
சென்னை: திமுக எம்.பி திருச்சி சிவாவை, அதிமுக பெண் எம்.பி சசிகலா புஷ்பா தாக்கிய விவகாரம் தொடர்பாக திமுக ஏன் போலீசில் புகார் அளிக்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி சிவாவை, டெல்லி ஏர்போர்ட்டில் வைத்து சசிகலா புஷ்பா தாக்கிய சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே நேற்று ராஜ்யசபாவில் வைத்து அதற்கு சசிகலா புஷ்பா மன்னிப்பு கோரினார்.
ஜெயலலிதா தன்னை அறைந்து, ராஜினாமா கடிதம் கேட்டு பெற்றதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார்.

அதிர்ச்சி
இதுகுறித்து சென்னையில் அவர் அளித்த பேட்டியொன்றில் கூறியதாவது: டெல்லி விமான நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் திமுக எம்.பியை, அதிமுக பெண் உறுப்பினர் தாக்கினார் என்ற செய்தி அதிர்ச்சி அளித்தது.

நாகரீகம் இல்லை
பொது இடத்தில் மக்கள் பிரதிநிதிகள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்கிற நாகரீக வரம்புகளை மீறி அவர் செயல்பட்டு இருக்கிறார் என்பது தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்றாகும்.

விவாதம், புகார் இல்லை
அதற்கு சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் வருத்தம் தெரிவித்து இருக்கிறார். ஆனால், காரணம் என்ன என்பது பற்றியெல்லாம், மாநிலங்களவையில் விவாதிக்காதது ஏன்? தாக்கிய சசிகலா புஷ்பா மீது திமுக சார்பில் போலீசில், புகார் கொடுக்காததும் வழக்கு பதிவு செய்யாததும் ஏன் என்றும் புரியவில்லை.
பாதுகாப்பு தேவை
இந்த நிலையில் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு இல்லை என்று மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

பின்னணி என்ன
சசிகலா புஷ்பா, பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதற்கும் அதிமுக தலைமை கடந்த 4 மாதங்களாக பதவியை ராஜினாமா செய்யக்கோரி வற்புறுத்தியதாக கூறியதற்கும் என்ன பின்னணி என்பதை பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அதிமுகவின் கடமையாகும்.

பாராட்டு
சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை விடுதலை சிறுத்தை வரவேற்று பாராட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications