ஈவிகேஎஸ் இளங்கோவன்- திருநாவுக்கரசர் மோதலுக்கு காரணமே "அந்த தலைவர்" தானாமே?
ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர் இடையேயான மோதலுக்கு திமுகவின் மூத்த தலைவர் ஒருவர்தான் தூபம் போட்டதாக கூறப்படுகிறது. திமுக மூத்த தலைவரின் தூண்டுதலாலேயே திருநாவுக்கரசை இளங்கோவன் கடுமையாக விமர்சிப்பதா
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் மாஜி தலைவர் இளங்கோவன் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. இந்த மோதலுக்கு காரணமே கூட்டணி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்தான் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.
ஜெயலலிதா மற்றும் அதிமுக விவகாரங்களில் திமுக என்ன கருத்து தெரிவித்தாலும் அதை உடனே மறுத்து கருத்து தெரிவித்து வருகிறார் திருநாவுக்கரசர். அவரது தொடரும் மறுப்புகளால் திமுக மிகவும் அதிருப்தி அடைந்துள்ளது.
பீட்டர் அல்போன்ஸிடம்...
இது தொடர்பாக திமுக தலைவர்கள் ஏற்கனவே பீட்டர் அல்போன்ஸிடம் தங்களது வருத்தத்தைத் தெரிவித்திருந்தனர். ஆனால் திருநாவுக்கரசர் தம்முடைய கருத்து சரிதான் என வாதிட்டார்.
கோபத்தில் திமுக
ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்டது திமுக. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து திருநாவுக்கரசர் பேட்டியளித்திருந்தது திமுக தலைவர்களை கோபப்படுத்தியது.
இளங்கோவன், சிதம்பரத்துடன்...
இந்த நிலையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரிக்க சென்னை வந்தார் ராகுல் காந்தி. அப்போது இளங்கோவன், ப.சிதம்பரம் ஆகியோரிடமும் திமுகவின் மூத்த தலைவர் ஒருவர் திருநாவுக்கரசரின் போக்கு குறித்து சுட்டிக்காட்டினார்.
திமுக தலைவரின் கமெண்ட்
அத்துடன், நாங்கள் ராகுல் காந்தியை பிரதமராக்க முயற்சிக்கிறோம்.. ஆனால் திருநாவுக்கரசரோ சசிகலாவை முதல்வராக்க துடிக்கிறாரே எனவும் கிண்டலடித்தாராம். இதனைத் தொடர்ந்துதான் திருநாவுக்கரசருக்கு எதிராக இளங்கோவன் அறிக்கைவிட்டாராம். அதாவது தற்போதைய தமிழக காங்கிரஸின் குடுமிபிடி சண்டைக்கு காரணமே அந்த தலைவர் 'சிண்டுமுடிந்து'விட்டதுதான் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.