முறையான ஆவணங்கள் எங்கே? சொகுசு கார் விவகாரத்தில் ஆர்ஐ அதிரடி.. யூடியூபர் இர்பானுக்கு சிக்கல் ?
சென்னை: பிரபல யூடியூபர் இர்பானின் கார் மோதி மூதாட்டி உயிரிழந்த விவகாரத்தில் கார் குறித்து முறையான ஆவணங்களை போலீசார் ஒப்படைக்காததால், வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் சொகுசு காரை, காவல் நிலையத்திற்கே திருப்பி அனுப்பினர்.
மிகப்பிரபலமான யூடியூபர் முகமது இர்பான்.. சென்னையை சேர்ந்த இவர் இர்ஃபான்ஸ் வியூ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவருக்கு 3.64 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர்.

தமிழில் உணவு பதிவுகளை வெளியிடுவதில் மிக முக்கியமானவர்.. கையேந்தி பவன் முதல் ஸ்டார் ஹோட்டல் வரை பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவர் சாப்பிடும் வீடியோக்களை இளைஞர்கள் ரசித்து பார்ப்பார்கள். ஒவ்வொரு நாளும் இவர் வெளியிடும் உணவு பதிவுகளுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு அதிகம். ஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட விஷயங்களை தன்னுடைய வீடியோவில் தருபவர்.. சமீபத்தில்தான், இவருக்கு கல்யாணம் ஆனது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இர்பானின் கார் விபத்துக்குள்ளாகி உள்ளது.. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே இர்பான் கார் சென்றபோது, எதிரே வந்த பெண்மணி மீது பலமாக மோதி, விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த பெண் உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண் பத்மாவதிக்கு 55 வயதாகிறது. பொத்தேரி அருகே கோனாதி முரளி நகரில் வசித்து வந்திருக்கிறார். பொத்தேரியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்காக மறைமலைநகரில் ஜிஎஸ்டி சாலையை கடக்க முயன்றபோது, இர்பானின் சொகுசு கார் வேகமாக வந்து பத்மாவதி மீது மோதியிருக்கிறது.. இதில், சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார் பத்மாவதி.
பொத்தேரி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்தை ஏற்படுத்திய காரை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர் இதையடுத்து, கார் டிரைவர் அசாருதின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனிடையே விபத்து நடந்த போது, யூடியூபர் இர்பானும், அவரது மனைவியும் காரில் இருந்தது தெரியவந்தது. இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட இர்பானின் சொகுசு காரை செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிசோதனைக்காக ஆஜர்படுத்தப்பட்டது.
ஆனால் முறையான ஆவணங்களை போக்குவரத்து போலீசார் ஒப்படைக்காததால், இர்பானின் கார் மீண்டும் காவல் நிலையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. மீண்டும் செவ்வாய்கிழமை கார் பரிசோதனை செய்யப்படும் என்று கூறப்படும் நிலையில், பரிசோதனை முடிந்த பின்னரே இர்பானின் வாகனம் விடுவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications