ஜெ. மறைவுக்கு சசிகலாவிடம் இரங்கல் தெரிவித்தார் என். ராம்- 'தி இந்து' தமிழ்
ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க சசிகலாவை சந்தித்தார் என். ராம் என தி இந்து தமிழ் தெரிவித்துள்ளது. அண்மை நிகழ்வுகள் தொடர்பாகவும் இருவரும் உரையாடினர் எனவும் அச்செய்தி கூறுகிறது.
சென்னை: அதிமுக தலைமைப் பொறுப்பை குறுக்கு வழியில் கைப்பற்றினால் அக்கட்சி பேரழிவை சந்திக்கும் என எச்சரித்திருந்த இந்து குழுமத் தலைவர் என். ராம் நேற்று திடீரென சசிகலாவை நேரில் சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதே சசிகலா அரசாங்கத்தை வழிநடத்தக் கூடாது என குரல் கொடுத்தார் இந்து என். ராம். அதேபோல் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக தலைமைப் பொறுப்பை சசிகலா கைப்பற்றவும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் இந்து என். ராம்.
இந்த நிலையில் தந்தி குழுமத் தலைவர் சி. பாலசுப்பிரமணியன் ஆதித்தன் திடீரென சசிகலாவை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து இந்து குழுமத்தின் தலைவர் என். ராம் நேற்று போயஸ் கார்டன் சென்று சசிகலாவை நேரில் சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பு தொடர்பாக தி இந்து தமிழ் நாளேடு வெளியிட்டுள்ள செய்தி விவரம்:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை 'தி இந்து' குழுமத் தலைவர் என்.ராம் நேற்று சந்தித்து பேசினார்.
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, ஜெயலலிதா மறைவுக்கு சசிகலாவிடம் என்.ராம் இரங்கல் தெரிவித்தார்.
சுமார் 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தனது தோழி ஜெயலலிதாவின் சிறப்பான பல குணங்கள் குறித்த நினைவுகளை சசிகலா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு மிகச் சிறப்பான சிகிச்சை அளித்தனர். ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக முன்னேறி வந்தது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக அவர் மரணமடைந்தபோது தான் மிகுந்த அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் ஆளானதாக சசிகலா தெரிவித்தார்.
அப்போது சசிகலாவுக்கு 'தி இந்து' குழுமத் தலைவர் என்.ராம் ஆறுதல் கூறினார். மேலும், அண்மை நிகழ்வுகள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் உரையாடினர்.
இவ்வாறு தி இந்து தமிழ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.