கடைசி வரை நேசித்தார்.. கார் ஏற்றிக் கொலையும் செய்தார்.. கடைசியில் தானும் செத்தார்!
சென்னை: நான் ஆசிரியை நிவேதாவை கடைசி வரைக்கும் நேசித்தேன். எத்தனையோ உதவிகள் செய்துள்ளேன். அவர் துரோகம் செய்து விட்டார். அதனால்தான் கொலை செய்தேன் என்று கைது செய்யப்பட்டுள்ள தீயணைப்புப் படை வீரர் இளையராஜா கூறியுள்ளார். கடைசியில் இன்று இளையராஜாவும் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.
தமிழகம் மீண்டும் ஒரு கள்ளக்காதல் கொலையைக் கண்டுள்ளது. கோவையைச் சேர்ந்த ஆசிரியை நிவேதா என்பவரை அவரது கள்ளக்காதலர் இளையராஜா என்பவர் சென்னையில் வைத்து கார் ஏற்றிக் கொன்று விட்டார். இந்த சம்பவத்தில் நி்வேதாவின் இன்னொரு காதலரானா கணபதி என்பவர் உயிர் தப்பியுள்ளார்.
இருவரையும் கொல்வதே தனது திட்டமாக இருந்ததாகவும், ஆனால் கணபதி தப்பி விட்டதாகவும் இளையராஜா வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது வாக்குமூலத்திலிருந்து:

6 வருடமாக
நானும் நிவேதாவும் 6 வருடமாக சேர்ந்து வசித்தோம். அவருக்கு கணவர் இல்லை, பிரிந்து விட்டார். நிவேதாவின் தாயாருக்கு நான் நிறைய உதவி செய்துள்ளேன். அதுதான் நிவேதாவை என் பக்கம் ஈர்த்தது. என்னை நேசிக்க ஆரம்பித்தார்.

அன்புக்கு ஏங்கியவர்
நிவேதா அன்புக்கு ஏங்கியவர். அதை நான் கொடுத்தேன். இருவரும் நேசத்துடன் பழகினோம். அப்போது எனக்குத் திருமணமாகவில்லை. குடும்பச் சூழல் காரணமாக நான் திருமணம் செய்ய நேர்ந்தபோதும் கூட நிவேதாவை நான் விடவில்லை. தொடர்ந்து நேசித்தேன். அவரும் அப்படித்தான்.

குறுக்கே வந்த கணபதி
இந்த நிலையில்தான் கணபதி குறுக்கே வந்தார். பேஸ்புக் மூலமாக பழகினார். அது காதலாக மாறிப் போனது. அதேசமயம், ஆசை வார்த்தைகளைக் கூறி நிவேதாவை ஏமாற்றி அவர் பணம் பறித்து வந்தார். இதை நான் அவருக்கு பலமுறை எடுத்துச் சொல்லியும் அவர் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

அவருக்குப் புரியவில்லை
நான் சொன்னது அவருக்குப் புரியவில்லை. சென்னைக்கு தனது மகளைப் பார்க்க வந்த அவர் கணபதியையும் பார்க்க வேண்டும் என்றார். குட்பை சொல்லி விட்டு வந்து விடு என்று சொல்லித்தான் கூட்டி வந்தேன். ஆனால் வந்த இடத்தில் அவருடன் இவர் காட்டிய நெருக்கம் என்னை அதிர வைத்தது. இதனால்தான் காரை ஏற்றி விட்டேன்.

கடைசி வரை நேசித்தேனே
அதில் நிவேதா இறந்து விட்டார். கணபதி தப்பி விட்டார். கடைசி வரை நான் நிவேதாவை நேசித்தேன். ஆனால் அவர் செய்த துரோகம் என்னை கோபப்படுத்தி விட்டது. அதனால்தான் கொன்றேன் என்று கூறியுள்ளார் இளையராஜா. இவ்வாறு வாக்குமூலம் கொடுத்திருந்த இளையராஜா இன்று புழல் சிறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து விடடார்.












Click it and Unblock the Notifications