விழுப்புரம் ஏன் மோசமாக இருக்குது? கலெக்டரிடமே நேரடியாக முதல்வர் ஸ்டாலின் கேள்வி
சென்னை: மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் விழுப்புரம் மாவட்டம் ஏன் மோசமாக இருக்கிறது? என்று அம்மாவட்ட கலெக்டரிடமே நேரடியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
'முதல்வரின் முகவரி' துறையின் செயல்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின், முதல்வரின் முகவரி திட்டத்தால் பயனடைந்த பயனாளிகளிடமும், அதிக மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசினார்.

அப்படி பேசும் போது, விழுப்புரம் மாவட்ட ஆட்சி தலைவர் பழனியிடமும் பேசினார். விழுப்புரம் மாவட்டத்தில் மனுக்கள் மீது போதிய அளவு நடவடிக்கை வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சிதலைவர் பழனி இடையேயான உரையாடல் பின்வருமாறு:
மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது உங்கள் மாவட்டம் ரொம்ப மோசமாக (முதல்வரின் முகவரி மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்) இருக்கிறது. ஏன் இப்படி நடக்கிறது? இதற்கு என்ன காரணம்? என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி கேட்டார்.
அதற்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சி தலைவர் பழனி கூறுகையில், " ஜூன் 10-ந்தேதி முதல் இந்த மாதம் வரை அனைத்து வட்டார அலுவலகங்களிலும் ஜமாபந்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் 2 ஆயிரம் மனுக்கள் கூடுதலாக வாங்கினோம். இதனால் மனுக்கள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. இந்த மனுக்கள் மீது வேகமாக நடவடிக்கை எடுத்து முடித்து விடுகிறோம்" என்றார்.
அப்போது முதலவர் ஸ்டாலின், கலெக்டர் பழனியிடம், இதில் ஏதேனும் சங்கடம் இருந்தால் சொல்லுங்கள் என்றார். அதற்கு பதில் அளித்த கலெக்டர் பழனி, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நடவடிக்கைகள் எடுத்து விடுகிறோம் சார் என்றார். அதற்கு முதல்வர் ஸ்டாலின்,அடுத்த ஆய்வு கூட்டத்தில் சரியாக இருக்க வேண்டும். பார்த்து கொள்ளுங்கள் என்றார். அதற்கு விழுப்புரம் கலெக்டர், கண்டிப்பாக. பார்த்து கொள்கிறேன் என்றார். இவ்வாறு இந்த உரையாடல் நடந்தது.
முன்னதாக தஞ்சை மாவட்டத்தில் மருத்துவ உதவி பெற்ற குழந்தை இனியனின் தாயார் சுனந்தாவிடம் பேசினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் மற்றும் குழந்தையின் தாயார் சுனந்தா இடையே நடந்த உரையாடல் பின்வருமாறு:
முதல்வர் மு.க.ஸ்டாலின்:- ஒரு வயது குழந்தை இனியனுக்கு அறுவை சிகிச்சை முடிந்துவிட்டதா?
குழந்தையின் தாயார் சுனந்தா:- முடிந்து விட்டது சார்.
கேள்வி:- குழந்தை இப்ப நல்லா இருக்கா?
பதில்:- நல்லா இருக்கு சார். ஹீமோ தெரபி கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
கேள்வி:- மறுபடியும் பரிசோதனைக்கு வர சொல்லி இருக்கிறார்களா?
பதில்:- ஆமாம் சார், வர சொல்லி இருக்கிறார்கள்.
கேள்வி:- சரிம்மா, தொடர்ந்து கண்காணித்து கொள்ளுங்கள். வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? நீங்கள் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்கம்மா.
பதில்:- நான் இல்லத்தரசியாக இருக்கிறேன் சார். ஹீமோ தெரபி கொடுக்க ஏற்பாடு செய்து கொடுத்தால் ரொம்ப உதவியாக இருக்கும் சார்.
கேள்வி:- கண்டிப்பாக செய்ய சொல்கிறேன்.
இவ்வாறு இந்த உரையாடல் இருந்தது.
இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற்ற கல்லூரி மாணவி ராம்குமாரியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார் அந்த உரையாடல் வருமாறு:-
கேள்வி:- வணக்கம்மா, குமாரிங்களா...
பதில்:- ஆமாம் சார், நீங்கள் நல்லா இருக்கீங்களா?
கேள்வி:- நல்லா இருக்கிறேன். இப்போ என்ன படிச்சுட்டு இருக்கீங்க?
பதில்:- நான் பி.எஸ்சி. 'அக்ரி' படிக்கிறேன் சார். நிதி கொடுத்ததற்கு ரொம்ப நன்றி சார். அப்பா விவசாயம் பார்க்கிறார்கள். எனக்கும் விவசாயம் செய்ய வேண்டும் என்பதுதான் ஆசை.
இவ்வாறு உரையாடல் நடந்தது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலை பாராட்டி முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஜெயபால் இடையேயான உரையாடல் வருமாறு:-
முதல்வர் மு.க.ஸ்டாலின்:- ஜெயபால் வணக்கம்.
டி.எஸ்.பி. ஜெயபால்:- வணக்கம் சார், நீங்கள் பேசுறது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி சார்.
கேள்வி:- நீங்கள் ஆலங்குளத்தில்தான் வேலை பார்க்கிறீர்களா?
பதில்:- ஆமாம் சார், ஆலங்குளத்தில்தான் டி.எஸ்.பி.யாக இருக்கிறேன்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- முதலில் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை சொல்லி கொள்கிறேன். நீங்கள் நல்லா, திருப்தியா வேலை செய்து இருக்கீங்க...

பதில்:- நன்றி சார்.
கேள்வி:- இதை எப்படி செய்தீர்கள் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா?
பதில்:- எங்களுக்கு முதல்வரின் முகவரி என்ற 'போர்டல்' மூலம் மனுக்கள் வருகிறது. இந்த மனுக்களை குறிப்பிட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் 'இ-மெயில்' மூலம் அனுப்பி வைக்கிறோம். இந்த 'மெயிலை' அவர்கள் பார்த்து விட்டார்களா? இல்லையா? என்பதை உடனடியாக உறுதி செய்கிறோம்.
அதே வேளையில் இரவு 8 மணிக்கு தொடர்பு கொண்டு, இன்றைக்கு முதல்வரின் முகவரியின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதா ? என்பதை கேட்கிறோம். அதற்கு அவர்கள், இன்றைக்கு இத்தனை மனுக்களுக்கு தீர்வு கண்டிருக்கிறோம் என்று தெரிவிப்பார்கள். பின்னர் மனுதாரர்களிடம் போன் செய்து, உங்களுக்கு திருப்திதானா? என்று கேட்கிறோம்.
ஒருவேளை அவர்களுக்கு திருப்தி இல்லை என்று சொன்னால், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரடியாகவே இன்ஸ்பெக்டரை வைத்து விசாரிக்கிறோம். இப்படியாக உரையாடல் நடந்தது.












Click it and Unblock the Notifications