என் திருமணம், அம்மாவின் மரணத்திற்கு அத்தை வராமல் போனதேன் - மனம் திறந்த தீபா
என் மீது பாசம் வைத்திருந்த அத்தை என் திருமணத்திற்கு வரவில்லை என்று தீபா கூறினார். என் அம்மாவின் மரணத்திற்கு அவர் வரவில்லை என்றும் கூறினார்.
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அதிமுக தொண்டர்கள் ஒரு சாரார் சின்ன அம்மா என்றே போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர். தீபாதான் உண்மையான ரத்தத்தின் ரத்தம் என்பது பல அதிமுக தொண்டர்களின் கருத்து.
ஜெயலலிதா இருந்தவரை கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக போயஸ் கார்டனுக்குள் சென்று அவரை பார்க்க முடியாமல் போனது. தீபாவின் குடும்பத்தில் நிகழ்ந்த மிக முக்கிய நிகழ்வான தீபாவின் திருமணத்திற்கு அவரது பாச அத்தையான ஜெயலலிதா வரவில்லை.
இதே போல ஜெயலலிதாவின் அண்ணி, அதாவது தீபாவின் அம்மாவின் மரணத்திற்கும் ஜெயலலிதா வரவில்லை. இதற்கு காரணம் பற்றி பேட்டியளித்த தீபா, அத்தையை எங்கும் வர விடாமல் தடுத்தவர் அவர்களுடன் இருந்தவர்தான். கடைசி வரைக்கும் அத்தையை பார்க்க விடாமலேயே செய்து விட்டனர்.
எங்கள் குடும்பத்தில் நடக்கும் எந்த தகவலும் அத்தையின் காதுக்குள் போய் விடாமல் செய்து விட்டனர். அவருடன் இருந்தவர்கள்தான் அடிக்கடி வந்து தகவல்களை சொன்னார்கள். என் அத்தையை பல ஆண்டுகளாக சசிகலா ஏமாற்றிக் கொண்டு வந்துள்ளார். ஆனால் என்னை யாராலும் ஏமாற்றி விட முடியாது என்றும் தீபா கூறினார்.
அத்தை எங்களுடன் நெருக்கத்தை காட்டிய போது எங்கள் மீது வெறுப்பை காட்டினர். எனக்கு ஆரம்பத்தில் இருந்தே அவர்களை பிடிக்கவில்லை. ஆனால் தீபக் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தீபா வேண்டாம் என்று தடுத்து விட்டார்கள் என்றும் கூறியுள்ளார் தீபா.