அதிமுகவின் செய்தி தொடர்பாளர் பட்டியலில் ஆவடி குமார் இடம்பெறாதது ஏன்?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா, சில தினங்களுக்கு முன்பு அறிவித்த அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் தலைமைக்கழக பேச்சாளரான ஆவடி குமாரின் பெயர் விடுபட்டுவிட்டது. இதற்கு காரணம் கட்சியில் இருந்தவர்கள் செய்த உள்ளடி வேலைதான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தொலைக்காட்சி விவாதங்களில், அ.தி.மு.க சார்பில் பங்கேற்கும் ஆவடி குமாரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. காலை 7 மணிக்கு விவாத நிகழ்ச்சியாகட்டும், இரவு 9 மணி நேரடி விவாதமாகட்டும் , சோர்ந்துவிடாமல் கட்சியின் கருத்துக்களை வலுவாக முன்வைத்து பேசுவார்.

இந்நிலையில் சமீபத்தில் அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இந்தப்பட்டியலில் 14 பேர் இடம் பெற்றுள்ளனர்.
1. பொன்னையன் - முன்னாள் அமைச்சர்
2. பண்ருட்டி.ராமச்சந்திரன் - முன்னாள் அமைச்சர்
3. ஆர்.வைத்திலிங்கம் - கழக அமைப்புச் செயலாளர், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
4. பா.வளர்மதி - கழக இலக்கிய அணிச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
5. நாஞ்சில் சம்பத் - தலைமைக் கழகப் பேச்சாளர்
6. டாக்டர் கோ.சமரசம் - தலைமைக் கழகப் பேச்சாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
7. பாலசுப்ரமணியன் - முன்னாள் மத்திய அமைச்சர்
8. டாக்டர் வைகைச்செல்வன் - முன்னாள் அமைச்சர்
9. சி.ஆர். சரஸ்வதி - கழக மகளிர் அணி துணைச் செயலாளர்
10. பேராசிரியர் தீரன் -தலைமைக் கழகப் பேச்சாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
11. கௌரிசங்கர் -சிவகங்கை மாவட்டம்
12. பாண்டியராஜன் - ஆவடி சட்டமன்றத் தொகுதி
13. கோவை செல்வராஜ் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
14. நிர்மலா பெரியசாமி - தலைமைக் கழகப் பேச்சாளர்
இந்தப்பட்டியலில் தொலைக்காட்சி விவாதங்களில் அடிக்கடி பங்கேற்கும் ஆவடி குமார் பெயர் இடம்பெறாதது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.
கடந்த முறை ஊடகங்களில் அதிமுக சார்பில் ஒரு சிலர் மட்டுமே பேசி வந்தனர். கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களை அழைத்து பேசின ஊடகங்கள். அவர்கள் ஆட்சியின் சாதனைகளை கட்சி நிர்வாகிகள் முறையாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்று பேச்சு எழவே, இம்முறை ஊடகங்களில் பேசுவதற்கு 14 பேரை நியமித்துள்ளார் ஜெயலலிதா. ஊடகங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரவே செய்தி தொடர்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. இது மேலும் அதிகரிக்குமாம்.
இந்த செய்தி தொடர்பாளர்கள் தினசரி எதிர்கட்சியினர் கொடுக்கும் அறிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. அதோடு அதிமுக செய்தி தொடர்பாளர்கள் தினசரி தலைமைக்கழகம் வரவேண்டும், டிவி விவாதங்களில் பங்கேற்கும் முன்பாக பேசும் சப்ஜெக்ட் குறித்து சீனியர்களிடம் ஆலோசனை பெற்று செல்ல வேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டுள்ளதாம்.
இந்தப்பட்டியலில், ஆவடி குமாரின் பெயர் இடம்பெறவில்லை. தலைமையின் முடிவை ஏற்றுக் கொண்டு, 'தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு பெற விரும்பவில்லை' என தனக்கு அழைப்பு விடுத்த தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரிவித்துவிட்டார் ஆவடி குமார்.
கடந்த ஆட்சியின்போது, ஊடகங்கள் ஆவடி குமாருக்கு கொடுத்த அதீத முக்கியத்துவத்தால், அதிர்ந்து போனார் தலைமைக் கழக பேச்சாளர் ஒருவர். அவர்தான், போயஸ் கார்டன் நிர்வாகிகளிடம் சொல்லி ஆவடி குமாரை டி.வி விவாதங்களில் பங்கெடுக்கவிடாமல் தடுத்தார்.
ஒருகட்டத்தில், அந்தப் பிரமுகர் மீது கட்சித் தலைமை கோபம் கொள்ள, தொலைக்காட்சி விவாதங்களில் வழக்கம் போல வலம் வந்தார் ஆவடி குமார். இப்போது புதிதாக நியமிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் குமாரின் பெயர் இடம் பெறாமல் போனதற்கும் அவரும், டி.வி விவாதங்களில் பங்கெடுக்கும் இன்னொரு நட்சத்திர முகமும்தான் காரணம் என்கின்றனர்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் குறித்து சர்ச்சைக்குரிய தலைப்புகளில் தொலைக்காட்சிகளில் விவாதம் நடக்கும்போது, தனி ஒருவராக நின்று அனைவரையும் சமாளித்து விவாதம் நடத்தியவர் ஆவடி குமார். இப்போது அவரே கட்சி உள்ளடிகளால் கலங்கி போயிருக்கிறாராம்.
அதே நேரத்தில் ஆவடி தொகுதியில் சீட் கேட்டும் கிடைக்காத காரணத்தால் ஆவடியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பாண்டியராஜனுக்கு ஆவடி குமார் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் அது தெரிந்தே செய்தி தொடர்பாளராக ஆவடி குமாரை அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications