ஜி.எஸ்.டி. மசோதாவை ஜெயலலிதா எதிர்ப்பது இதனால்தான்...
சென்னை: நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) நடைமுறைப்படுத்தினால் தமிழக அரசின் சொந்த வருவாய் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு இலவச லேப்டாப், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கான நிதிபற்றாக்குறை ஏற்படும் என்பதால் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
நாட்டில் தற்போது பல்வேறு சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறைகள் நடைமுறையில் உள்ளது. இதனை மாற்றி நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த மத்திய அரசு நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது. தற்போதைய பாரதிய ஜனதா அரசு இதில் மிகத் தீவிரமாக இருக்கிறது.
இதற்கான மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட போதும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இந்த ஜி.எஸ்.டி.க்கு தமிழக அரசு மிகக் கடுமையாகவே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

திருத்தம் அவசியம்
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்த முதல்வர் ஜெயலலிதா ஜி.எஸ்.டி. மசோதாவில் சில திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்; அப்படி திருத்தங்களை மேற்கொண்டால் மசோதா நிறைவேற ஆதரவு தருவோம் எனவும் வலியுறுத்தி இருந்தார். மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியும் கூட, தமிழகம் தவிர்த்த இதர மாநிலங்கள் ஜி.எஸ்.டி.க்கு ஆதரவு தெரிவித்துள்ளன எனவும் கூறியிருந்தார்.

என்ன விளைவு?
தமிழகத்தைப் பொறுத்தவரையில் இது மாநிலத்தின் சொந்த வருவாயை மிகக் கடுமையாக பாதிக்கும் என கருதுகிறது. இதனால் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு கூடுதலாக கடன்வாங்க நேரிடும். இல்லையெனில் அரசு அறிவித்த நலத்திட்டங்களைக் கைவிடவும் நேரிடலாம் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

70% வருவாய் பாதிப்பு
தமிழக அரசின் சொந்த வருவாயில் 70% என்பது விற்பனை மற்றும் வாட் வரி மூலமே கிடைக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் 2016-17-ம் ஆண்டில் மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ95,531 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக இழப்பு
இந்த நிலையில் ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தினால் தமிழகத்துக்கு மிகப் பெரிய அளவிலான சொந்த வருவாய் இழப்பு ஏற்படும். ஜி.எஸ்.டி. மசோதாவில் உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு கிடைக்கும் வருவாயை விட அந்த பொருட்களை பயன்படுத்துகிற மாநிலங்கள் அதிக ஆதாயம் அடையும் வகையிலான அம்சங்கள் உள்ளன. தமிழகம் பல்வேறு பொருட்களின் உற்பத்தி மாநிலமாக இருப்பதால் அதிக வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என்பது யதார்த்தம்.

திருத்தம் நிறைவேறினால் ஆதரவு
இதனாலேயே தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜி.எஸ்.டி. மசோதாவுக்கு மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து திருத்தங்களை நடைமுறைப்படுத்தினால் ஆதரவு தருவோம் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications