'ஜெ. நன்றாக இருக்கிறார்... பேனாவை பிடித்து கையெழுத்திட மட்டும் முடியவில்லை'
முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார்... அவரது கை வழியாக மருந்துகள் செலுத்தப்பட்ட காரணத்தால் பேனாவை பிடிக்க முடியாமல் பெருவிரல் ரேகை வைத்தார் என அரசு பொது மருத்துவமனை மருத்துவர் பாலாஜி தெரிவித்துள்ளார
சென்னை: முதல்வர் ஜெயலலிதா நலமடைந்துவிட்டார்.... கை வழியாக மருந்துகள் செலுத்தப்பட்டதால் பேனாவை பிடித்து கையெழுத்திட முடியாமல் வேட்பாளர்களுக்கான படிவத்தில் பெருவிரல் ரேகையை வைத்தார் என சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர் பி. பாலாஜி கூறியுள்ளார்.
அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களில் அதிமுக பொதுச்செயலர் என்ற அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா 2 படிவங்களில் கையெழுத்திட வேண்டும். ஆனால் ஒரு படிவத்தில் ஜெயலலிதா பெருவிரல் ரேகையை வைத்திருந்தார். இதனால் அவரது உடல்நலம் குறித்தும் சட்டப் பிரச்சனைகள் குறித்தும் சர்ச்சைகள் எழுந்தன.

ஆனால் ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகையை ஏற்கலாம் என தேர்தல் ஆணையம் ஒப்புதல் தெரிவித்தது. இதனிடையே பெருவிரல் ரேகை மட்டுமே வைக்கும் நிலையில்தானா ஜெயலலிதா உடல்நலம் இருக்கிறது என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு ஜெயலலிதாவிடம் பெருவிரல் ரேகையைப் பெற்ற சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர் பாலாஜி அளித்த விளக்கம்:
ஜெயலலிதா நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவரால் எழுந்து உட்கார முடிகிறது. அவர் என்னிடம் நன்றாகவே பேசினார்.
ஜெயலலிதாவுக்கு கைகள் வழியாகவே மருந்துகள் செலுத்தப்படுகின்றன. இதனால் கை வலி அதிகமாக இருக்கிறது. பேனாவை பிடித்து கையெழுத்திட அவரால் முடியவில்லை. ஆகையால் பெருவிரல் ரேகையை வைத்தார். முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலமுடன் வீடு திரும்புவார்.
இவ்வாறு மருத்துவர் பாலாஜி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications