எல்லோர் பிரச்சனைக்கும் மீனவர்கள் வராங்க.. நாம மீனவர்கள் பிரச்சனையை கண்டுகொண்டோமா?
கன்னியாகுமரியில் நடக்கும் மக்கள் போராட்டம் பெரிய அளவில் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது.
Recommended Video

கன்னியாகுமரி: தென் தமிழகம் முழுவதையும் கடந்த வாரம் வந்த ஓகி புயல் மொத்தமாக சூறையாடியது. இந்த புயல் குறித்து போதுமான எச்சரிக்கை தமிழக மக்களுக்கு வழக்கப்படவேயில்லை.
இந்த நிலையில் எந்த விஷயமும் அறியாத மீனவ மக்கள் எப்போதும் போல கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது சென்ற மக்களில் இன்னும் நிறைய பேர் மீண்டும் கரைக்கு வரவேயில்லை.
இந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள மக்கள் இந்த மீனவர்களை மீட்கும் படி போராடி வருகின்றனர். இந்த போராட்டம் பெரிய அளவில் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது. அதேபோல் மீனவர்கள் பலர் இன்னமும் என்ன ஆனார்கள் என்பதும் தெரியாமல் உள்ளது.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு போராட்டம் சென்னையில் நடந்து கொண்டு இருந்தது. சரியாக கடைசி நாள் போராட்டத்தின் போது போலீசுக்கு பயந்து மாணவர்கள் ஒவ்வொரு மீனவ வீடாக தஞ்சம் அடைந்தார்கள். மீனவர்கள் அச்சமின்றி மாணவர்களுக்கு ஆதரவு அளித்தார்கள். இந்தியாவின் பெரிய அறவழி போராட்டமாக ஜல்லிக்கட்டு போராட்டம் பதிவாகிவிட்டது. ஆனால் அதில் முக்கிய பங்கு வகித்த மீனவர்களின், இன்றைய வாழ்வாதார போராட்டத்திற்கு இன்னும் யாருமே குரல் கொடுக்கவில்லை.

எந்த மீனவர்கள்
நீண்ட காலமாக விவாதத்தில் இருக்கும் விஷயம் இது. தமிழக மீனவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் கிடையாதா, அவர்களை ஏன் தமிழக மீனவர்கள் என்று குறிப்பிடுகிறார்கள் என்று விவாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது குமரி மக்களிடையே புதிய கேள்வி எழுந்துள்ளது. கடலில் காணாமல் போன மீனவர்களை குமரி மீனவர்கள் என்று குறிப்பிடுகிறீர்களே அவர்கள் தமிழக மீனவர்கள் இல்லையா என்று போராட்டத்தில் குரல் எழுப்பி வருகின்றனர். இந்திய மீனவர்கள் தமிழக மீனவர்கள் ஆகி தற்போது அவர்கள் குமரி மீனவர்கள் ஆகிவிட்டார்கள்.

சாதாரண விஷயமா
இந்த மாநிலமே எங்களுக்கு வேண்டாம் என்று குரல் கொடுத்துள்ளனர். எங்களை கேரளாவுடன் இணைத்துவிடுங்கள் என்று வள்ளியூரில் தொடங்கி களியக்காவிளை எல்லை வரை மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த குரலில் எத்தனை வேதனை இருக்கும் என்பது இன்னும் தமிழக அரசுக்கு புரியவேயில்லை. கேரளா முழுக்க இதுதான் தலைப்பு செய்தியாக இருக்கிறது. இது தமிழக அரசுக்கு மிகப்பெரிய தலைகுனிவு என்பதையும் இன்னும் யாரும் புரிந்து கொள்ளவில்லை.

எங்கே எல்லோரும்
ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது பல பிரபலங்களும், போராட்டம் மூலம் பிரபலம் ஆனா பலரும் மிக தீவிரமாக செயலாற்றினார்கள். ஆனால் அதில் கலந்து கொண்ட ஒருவர் கூட இந்த மீனவ போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஏன் அதுகுறித்து இதுவரை குரல் எழுப்பக்கூட எழுப்பவில்லை. இந்த கோபம் கூட குமரி மக்களின் கேரள இணைப்பு கோரிக்கைக்கு காரணமாக இருக்கலாம். 30 மணி நேரமாக போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது இன்னும் யாரும் போராட்டம் குறித்து பெரிதாக பேசவில்லை.

மீனவர்கள்
கிரிக்கெட் போட்டி நடந்தாலும் சரி, போர் வந்தாலும் சரி, புயல் வந்தாலும் சரி முதலில் பாதிக்கப்படுவது மீனவ மக்கள்தான். நேரடியாகவோ, மறைமுகமாகவோ மீனவ மக்கள் தினமும் ஒவ்வொரு இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இன்னும் கரை திரும்பாமல் இருக்கும் அந்த ஆயிரக்கணக்கான மீனவர்களின் கண்ணீருக்கும், போராட்டத்தில் இரவு முழுக்க இருந்த இளைஞர்களின் கோபத்திற்கும் எப்போது பதில் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications