கருணாநிதிக்கு ஒரு நியாயம், ஜெயலலிதாவுக்கு ஒரு நியாயமா நடுநிலைவாதிகளே..? சீறும் மனுஷ்யபுத்திரன்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தொடர்பானது என்றால் கண்டுகொள்ளாதவர்கள் திமுக தலைவர் கருணாநிதிக்கு மட்டும் அவை மரபு பேசுகிறார்கள் என்று, எழுத்தாளரும், திமுகவை சேர்ந்தவருமான மனுஷ்ய புத்திரன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் கருணாநிதிக்கு பின்வரிசை இருக்கை ஒதுக்கீடு செய்வதாக கூறியிருப்பது பற்றி மனுஷ்யபுத்திரன் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார்.
பேக்புக்கில் இதுகுறித்து மனுஷ்யபுத்திரன் கூறியுள்ளதாவது: ஜெயலலிதா சிறைக்குச் சென்றபோது முதல்வரான ஓபிஎஸ் முதல்வர் இருக்கையிலேயே அமர மறுத்து அந்த இருக்கையை காலியாகவே விட்டுவைத்தபோது அது அவை மரபுக்கு புறம்பானதாக கருதப்படவில்லை.
ஐந்து முறை ஆட்சி
ஆனால் ஐந்து முறை முதல்வராக தமிழகத்தை ஆண்ட கலைஞருக்கு மூன்றாம் வரிசையில்தான் இடம்கொடுப்பேன் என்று சொல்வது அவை மரபாம். இதை ஆதரிக்கவும் சில நடுநிலை நடிகர்கள். இப்படி ஒரு பதிவில் கூறியுள்ளார் மனுஷ்ய புத்திரன்.
குரூரமாக உள்ளது
மற்றொரு பதிவில், "மாபெரும் தலைவரான கலைஞருக்கு சட்டசபையில் தரவேண்டிய மரியாதையை ஒரு மாற்றுத்திறனாளிக்கு செய்துகொடுக்க வேண்டிய சலுகையாக முன்வைத்து பேசுகிறவர்களின் குரூரத்தை சகிக்க முடியவில்லை.
பக்கத்து இருக்கை
சட்டசபையில் ஜெயலலிதாவிற்கு பக்கத்து இருக்கை காலியாகவிடப்படுவது எதற்கு என்று விவாதிக்க தயாராக இல்லாதவர்கள்தான் கலைஞரின் சக்கர நாற்காலி பயன்பாட்டை வைத்து இவ்வளவு அவமதிப்புகளை உருவாக்குகிறார்கள்.
கேள்விகள்
இதற்குப் பெயர் சட்ட சபையா? இதற்குப் பெயர் ஜனநாயகமா? இதற்குப் பெயர் அரசியலா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் மனுஷ்யபுத்திரன்.