செய்தியாளர்களை சந்திக்கவே மறுக்கும் ஜெ..... கேட்காத ஊடகங்கள்... விஜயகாந்த் கேட்பதும் நியாயம்தானே!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா பத்திரிகையாளர்களை சந்திப்பதே இல்லையே.. அவரை சந்திக்க முயற்சித்தீர்களா? அவரிடம் கேள்வி கேட்பீர்களா? என்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் எழுப்புகிற கேள்விகள் அனைத்தும் நியாயமான ஒன்றுதான்... ஆனால், அதை விஜய்காந்த் சொன்ன முறை தான் மகா தப்பு.
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற போது ஒவ்வொரு வியாழக்கிழமையும் தாம் செய்தியாளர்களை சந்திப்பேன்... எனக்காக நீங்கள் காத்திருக்க வேண்டாம் என கனிவுடன் கூறினார்... அந்த கனிவு சொல் காற்றோடு கலந்து போய் நான்கரை ஆண்டுகளாகிவிட்டது..

ஜெயலலிதாவின் நான்கரை ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் ஊடகங்கள் பெரும்பாடு பட்டுக் கொண்டிருக்கின்றன... தலைமைச் செயலகத்துக்குள் வார இதழ்களுக்கு அனுமதி இல்லை.... எதற்கெடுத்தாலும் ஊடகங்கள் மீது அவதூறு வழக்குகள்.. அட செய்தி வாசிப்பாளர் மீது கூட அவதூறு வழக்கு...
தமிழகத்தில் மட்டும் குறிப்பிட்ட சில ஊடகங்கள் மீது அடுத்தடுத்து அவதூறு வழக்குகள்... முதல்வர் ஜெயலலிதாவுக்கு பக்கத்தில் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு வரிசையாக குனிந்துதான் அமைச்சர்களே நிற்க வேண்டும் என்கிற போது பத்திரிகை ஜாம்பவான்கள் அந்த பக்கம் எட்டியே பார்க்க முடியாத நிலை...
ஆனால் இதையெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு சுட்டிக் காட்டிய ஊடகங்கள் ஒன்றிரண்டுதான் இருக்க முடியும்.... ஊடக அறம் குறித்து மணிக்கணக்கில் விவாதிப்பவர்கள் கூட, எங்கே முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை வந்திருக்கும் விருந்தினர் சொல்லிவிடுவாரோ? ஜெயலலிதாவின் வீட்டில் வசிப்பவர்கள் பெயரை சொல்லிவிடுவாரோ என கண்கொத்திப் பாம்பாக கண்காணித்தாக வேண்டிய பதற்றத்தில்தான் ஊடக அறம், அறச் சீற்றம், ஊடக சுயபரிசோதனை போன்றவற்றை நடத்தியதாக வேண்டிய பெருந்துயரம் தமிழகத்தில் நீடிக்கிறது...
எதற்கெல்லாமோ கருத்து கணிப்பு நடத்திக் கொண்டிருக்கிற ஊடகங்கள், ஜனநாயகத்தின் 4-வது தூணாகிய ஊடகங்களையே சந்திக்காத முதல்வர் ஜெயலலிதா குறித்த மக்களின் மனநிலை என்ன என்று கருத்து கணிப்பு நடத்தியிருக்க வேண்டும்.. அப்படி நடத்தியிருந்தால் ஒன்று ஜெயலலிதா இறங்கி வந்திருக்கலாம்... மற்றொன்று விஜயகாந்த் மாதிரியான ஆசாமிகள் காறி துப்புவதையாவது தடுத்திருக்க முடியும்...
விஜயகாந்த் நேற்றுதான் ஏதோ ஜெயலலிதாவை பார்த்து கேள்வி கேட்டீர்களா என கேட்டுவிடவில்லை.. கடந்த நான்கரை ஆண்டுகாலமாகத்தான் விஜயகாந்த்தும் கேட்கிறார், கருணாநிதியும் கேட்கிறார், ஸ்டாலினும் கேட்கிறார்.. ஆனால் வழக்கம் போல ஒரு பிரஸ் மீட் அவ்வளவுதான் என ஊடகங்கள் கருதின... அதன் விளைவுதான் காறி துப்புவதில் வந்து சேர்ந்துள்ளது... ஜெயலலிதாவை நோக்கி ஏன் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பாமல் ஒதுங்கியே கிடந்தது ஊடகத்தார்களின் பெரும் தவறு.
ஒரு மாநிலத்தை ஆளும் முதலமைச்சர் குறித்து எத்தகைய ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை தமிழக ஊடகங்கள் முன்வைத்திருக்கின்றன? தன் இஷ்டத்துக்கு அமைச்சர்களை பந்தாடிக் கொண்டிருக்கிற போது கோல்களை எண்ணுகிறவர்களைப் போல 15-வது முறை அமைச்சரவை மாற்றம் என்று கொட்டை எழுத்தில் எழுதத் தெரிந்த பேனாக்களுக்கு இன்ன காரணத்துக்காக அந்த அமைச்சர் மாற்றப்பட்டார் என்ற உண்மை காரணத்தை ஊரறிய எழுத முடியாமல் முடங்கிப் போவது ஏன்?
இவ்வளவு ஏன்? செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பால் சென்னையின் பெரும்பகுதி மூழ்கிப் போனதே... இந்த பெருவெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை எவ்வளவுதான் என்கிற புள்ளி விவரத்தை தமிழக அரசு வெளியிடவில்லையே என்பதை எழுதத் துணிச்சல் உள்ள ஊடகம் எதுவும் இல்லாமல் போனது பெரும் துயரம்தான்....
விஸ்வரூபம் கமல் விவகாரம் மக்களின் குடி மூழ்கிற பிரச்சனை அல்ல.. அதற்காக செய்தியாளர்களை அழைத்து ஒரு மணி நேரம் பேசுகிற ஜெயலலிதாவால் செம்பரம்பாக்கம் குறித்து பேச முடியாமல் போனது ஏன்? என்று எத்தனை ஊடகங்கள் கேள்வி எழுப்பின?
வாட்ஸ் ஆப்பில் மக்களுக்காக நான் இருக்கிறேன் என்று கூற முடிந்த ஜெயலலிதா, அதை செய்தியாளர்களைக் கூப்பிட்டு அவர்களிடையே பேசி, அதை நேரலையாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுத்திருக்கலாம் அல்லவா? அதை ஊடகங்கள் சுட்டிக் காட்டாதது ஏன்?
தினசரி தவறாமல் ஜெயலலிதா தலைமைச் செயலகம் வருவது போல செய்தி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறீர்கள்.. அப்படி ஜெயலலிதா தினசரி வரும்போது ஒரு எட்டு செய்தியாளர்களிடம் பகிர்ந்துவிட்டு போவதை எது தடுக்கிறதாம்? எந்த ஊடகம் கேட்டது இதை...
அதே நேரத்தில் ஊடகங்களை வெளுத்து வாங்கும் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சிகள் தாங்கள் நடத்துகிற ஊடகங்கள் மூலம் சாதித்ததுதான் என்ன?
நீங்கள் பொதுவெளியில் எழுப்பும் கேள்விகளுக்கு உங்கள் ஊடகங்கள் மூலம் இந்த அரசிடம் இருந்து பதில் பெற முடிந்ததா?
ஆள், அதிகார பலம் கொண்ட நீங்கள் நடத்துகிற ஊடகங்களே வணிகம் சார் ஊடகங்கள் போட்டுக் கொடுக்கும் பாதையில்தான் நடக்கின்றன... அப்படியானால் நீங்கள் இப்படி காறி உமிழ்வதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறதா? என்பதையும் நீங்களும் சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்..
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை- ஆட்சி அதிகாரத்தை நோக்கி பயணிப்பவர்களை நெஞ்சுரத்துடன் முதுகெலும்புடன் நிமிர்ந்து நின்று கேள்வி எழுப்புகிற உயர் நிலையை தமிழ் ஊடகங்கள் எப்போதுதான் அடையுமோ?
பக்கத்து மாநிலங்களான கர்நாடகத்திலும் கேரளத்திலும் தொலைக்காட்சிகளில் அரசியல் தலைவர்களை வெளுத்து வாங்கும் Political sattire நிகழ்ச்சிகள் மிகப் பிரபலம். அதற்கு முதல்வரும் தப்புவதில்லை.
இங்கே...?????
ஆக... ஆட்சிக்கு வந்தபோது செய்தியாளர்களைச் சந்திப்பேன் என்று சொன்ன வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட ஜெயலலிதா போன்ற தலைவர்களுக்கு விஜயகாந்த் போன்ற அதிரடிப் பேர்வழிகள்தான் சரிப்பட்டு வருவார்கள் போல..
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications