செந்தில் பாலாஜி பதவியை பறித்த அஷ்டமத்து சனி?! குரு திரும்ப கொடுப்பாராமே?! அடடே காரணங்கள்!!
சென்னை: சிவப்பு சுழல் விளக்கு சுழல நேற்று வரை காரில் அமைச்சராக வலம் வந்த செந்தில் பாலாஜி இன்று முன்னாள் அமைச்சர்கள் பட்டியலில் இணைந்திருக்கிறார். இவரது பதவி பறிப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் ஜோதிட ரீதியாகவும் சில காரணங்களை தெரிவிக்கின்றனர்.
செந்தில் பாலாஜி, பரணி நட்சத்திரம், மேஷ ராசியில் பிறந்தவர். தற்போது, அவருக்கு அஷ்டமத்து சனி நடக்கிறது. இந்த கிரகக் கோளாறும், அவரின் பதவி பறிப்புக்கு ஒரு காரணம் என்கின்றனர்.
வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு உணவு தர பயன்படுவது - வாழை இலை; உணவில் வாசம் ஏற்படுத்துவது - கருவேப்பிலை; உணவாகவே பயன்படுவது - கீரை; சாப்பிட்ட பிறகு போடுவது - வெற்றிலை; வீட்டு வாசலை அலங்கரிப்பது மாவிலை; நோய் போக்கும் மருந்தாக பயன்படுவது - துளசி இலை. இப்படிப்பட்ட இலைகளின்தொகுப்புதான், இரட்டை இலை' என்று உயர்நீதிமன்றத்திற்கே விளக்கம் கொடுத்து ஏற்றுக் கொள்ளச் செய்த சாமர்த்திசாலி செந்தில் பாலாஜி. இதற்கான முதர்வர் ஜெயலலிதாவிடம் தனி பாராட்டை பெற்றவர். இன்றைக்கு அதே முதல்வர்தான் அமைச்சர், கட்சிப்பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

ஜோதிடத்தில் நம்பிக்கை
வி.செந்தில் குமாராக இருந்தவர் தனது பெயரை செந்தில் பாலாஜி என்று மாற்றிக்கொண்டதே ஜோதிடர் சொன்னதைக் கேட்டுதானாம். அந்த அளவிற்கு ஜோதிடத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்.

பெயர் மாறியது எப்படி?
கரூர், தான்தோன்றி மலை பெருமாள் தான், செந்தில் பாலாஜியின் குலதெய்வம். அந்த கோவில் மட்டுமல்ல; தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களுக்கும் போய் வரும் செந்தில் பாலாஜி, ஒரு நாள், பெருமாள் கோவில் ஒன்றில் இருந்த ஜோதிடர்தான் செந்தில் குமாராக இருந்தவரை, செந்தில் பாலாஜி என, பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னாராம்.

பலித்த வாக்கு
திறமை, தகுதியை விட, ஜாதகம் ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்ட செந்தில் குமார், உடனடியாக தன் பெயரை செந்தில் பாலாஜி என, மாற்றியுள்ளார். ஜோதிடரின் வாக்கு பலித்து, அமைச்சர் வரை ஆகிவிட்ட செந்தில் பாலாஜி, பதவி பறிபோன பின், தற்போது, குறிப்பிட்ட அந்த ஜோதிடரை தேடி வருகிறாராம்.

அஷ்டமத்து சனி
சனி பகவான் கோச்சாரத்தில் ராசிக்கு எட்டாமிடத்திற்கு வருவது தான் அஷ்டமத்து சனி. இந்த கால கட்டத்தில் தண்டனையிலிருந்து எவருமே தப்ப முடியாது. ஏழரை சனியில் கஷ்டங்களை அனுபவிக்காதவர்கள் கூட இந்த காலத்தில் கடுமையான கெடு பலன்களை அனுபவிப்பார்கள். அதற்கு காரணம் சனி பகவான் எட்டாமிடத்திற்கு வரும் போது சனி பகவானின் பார்வை 10, 2 மற்றும் 5 ம் வீடுகளின் மீது பதிகின்றன. அதன்படி அஷ்டமத்து சனி காலத்தில் சனி பகவானின் 3ம் பார்வையாக முதலில் 10ம் இடமான தொழில் உத்தியோக ஸ்தானத்தில் விழுவதால், முதலில் ஜாதகரின் வேலையையோ அல்லது தொழிலையோ காலி பண்ணி விடும். ஏதாவது ஒரு வகையில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தி விடும்.

செந்தில் பாலாஜிக்கு பதவி காலி
முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு இப்போது அஷ்டமத்து சனிதான் ஆட்டி வைக்கிறது. செந்தில் பாலாஜிக்கு மேஷ ராசி, பரணி நட்சத்திரம் அதனால்தான் அஷ்மத்து சனி தனது வேலையை காட்டிவிட்டது என்கின்றனர்.

குரு பெயர்ச்சி
அஷ்டமத்து சனியின் மீது குரு பார்வை பதிந்தால் மட்டும் தான் ஓரளவிற்கு அஷ்டமத்து சனியின் தாக்கம் குறையும் என்கின்றனர் ஜோதிடர்கள். இப்பொழுது மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி சாதகமாக இருக்கிறது. 5ல் சஞ்சரிக்கும் குரு ஜென்மராசி,9,11ஆம் வீடுகளை பார்வை செய்வது அற்புதமான அமைப்பாகும். எனவேதான் அஷ்டம சனி நடைபெற்றாலும் குருவின் சாதகமான சஞ்சாரத்தால் நினைத்தது நிறைவேறும் என்று கூறி வருகிறாராம் செந்தில் பாலாஜி.

நல்லதே நடக்கும்
இப்போது பதவி போனாலும் தனக்கு ஏற்றம் வரும். அதற்கான ஜாதக கட்டங்களை கொண்டது தான், என் ஜாதகம்' என, நெருக்கமானவர்களிடம், செந்தில் பாலாஜி கூறி வருகிறாராம். அதிமுகவில் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். அந்த நம்பிக்கையில்தான் மீண்டும் அமைச்சராவேன் என்று கூறுகிறார் செந்தில் பாலாஜி. எப்படியோ நல்லது நடந்தால் சரிதான்.












Click it and Unblock the Notifications